வினாத்தாள் அவுட் எதிரொலி: 10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு
இந்த ஆண்டு முதல் 10ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு பொதுத் தேர்வாக நடத்தப்படுகிறது. அரையாண்டுத் தேர்வு துவங்கி மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு அறிவியல், கணிதம், சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கிறது. இன்று சமூக அறிவியல் தேர்வு நடப்பதாக இருந்தது. ஆனால் இந்த தேர்வுக்கான வினாத்தாள் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் அச்சடிக்கப்பட்ட வேளையில் அப்பகுதியில் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவாட்டாரப் பகுதிகளில் சமூக அறிவியல் வினாத்தாள் விற்பனை நடந்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கள்ளர் சீரமைப்பு பள்ளி இணை இயக்குநர் செல்லம் சிவகாசியில் உள்ள ஏயு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆய்வு நடத்தினார். மேலும் மாவட்டத்தில் கேளவித்தாள்கள் வைக்கப்பட்டுள்ள 16 மையங்களில் கல்வித்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். இந்த சோதனைகளில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து வினாத்தாள் வெளியாகவில்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து சிவகாசியில் உள்ள சில அச்சகங்களிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது. பின்னர் இன்று நடைபெறுவதாக இருந்த சமூக அறிவியல் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய கேள்வித்தாள் அச்சடிக்கப்பட்டு இத்தேர்வு வரும் 10ம் தேதி நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அனைத்து பள்ளிகளில் உள்ள தகவல் பலகைகளில் வெளியிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.