செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது!
அலகோஸ் நகரில் உள்ள அராபிராகா சிறை பலத்த பாதுகாப்பு கொண்டது. இங்கு 263 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த புத்தாண்டு அன்று வெள்ளை சாம்பல் நிறம் கலந்த பூனை ஒன்று பிரதான நுழைவு வாயில் வழியாக பம்மி பம்மி 'கேட் வாக்' செய்து சிறைக்குள் புகுந்தது. இது பூனைதானே என்பதால் போலீசார் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அந்த பூனை வித்தியாசமாக இருந்ததோடு மெதுவாக நடந்து செல்வதைப் பார்த்த ஒரு காவலாளி அதன் அருகில் போய் அதை தூக்கிப் பார்த்தார்.
அப்போது பூனையின் உடலில் வால் பகுதிக்குக் கீழே டேப் சுற்றப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவலாளி டேப்பை கழற்றிய போது, பூனை உடலில் சுவரை துளை போடும் டிரில், மெமரி கார்டு, ஆக்ஸா பிளேடு, செல்போன், பேட்டரிகள் இருந்தன. இதைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவற்றை கைப்பற்றினர். பொருட்களை சிறைக்குள் கடத்தி வந்த பூனையை கூண்டுக்குள் அடைத்தனர். பின்னர் விலங்குகள் நோய் தடுப்பு மையத்துக்கு அனுப்பினர்.
பூனையிடம் செல்போன் உள்பட பொருட்களை வைத்து பூனையை சிறைக்குள் அனுப்பியது யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்று சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.