தயாநிதி மாறனுக்கு எதிரான வழக்கு: சிபிஐ, பி.எஸ்.என்.எல்க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பி.எஸ்.என்.எல், சிபிஐக்கு உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த எஸ். குருமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் தயாநிதி மாறனுக்கு எதிராக ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி பொறுப்பு வகித்த போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் அவரது சகோதரர் கலாநிதி மாறனின் நிறுவனமான சன் டிவி அலுவலகங்களில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மொத்தம் 323 தொலைபேசி இணைப்புகளை இப்படி முறைகேடாக பயன்படுத்தியதால் அரசுக்கு ரூ440 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டது என்றும் அந்த மனுவில் குருமூர்த்தி சுட்டிக் காட்டியிருந்தார்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பி.எஸ்.என்.எல். மற்றும் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.