பூச பவுர்ணமி: 45 லட்சம் பக்தர்கள் நீராடிய மகா கும்பமேளா
அலகாபாத்: பூச பவுர்ணமியை ஒட்டி கும்பமேளாவில் ஒரே நாளில் 45 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
அலகாபாத் நகரில் கடந்த 14ம் தேதி முதல் கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது.
லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் புனித நீராடி வருகின்றனர். அமாவாசை , பவுர்ணமி நாளில் அங்கு புனித நீராடினால் புண்ணியம் என்று கருதிய பக்தர்கள் அங்கேயே தங்கியுள்ளனர்.
ஹர ஹர மகாதேவா…
நேற்றைய தினம் பூச பவுர்ணமி என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த நன்னாளில் கங்கையில் நீராடுவது மகா புண்ணியம் என்று கருதிய பக்தர்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே கங்கைக் கரையில் குவிந்தனர். சாதுக்களின் ஓங்காரம்... ஹர ஹர மகாதேவா... முழக்கம், பக்தர்களின் ஆனந்த கூச்சல் என அந்த இடமே பக்தி வெள்ளத்தில் திளைத்தது. ஆயிரம் ஆயிரமாக பக்தர்களும், சாதுக்களும் ஒரே நேரத்தில் புனித நீராடியதால் அந்த இடம் முழுவதும் மனிதத்தலைகளாக காட்சியளித்தது.
பிரசித்தி பெற்ற தினங்கள்
மகா கும்பமேளா சமயத்தில் தினந்தோறும் நீராடுவது புண்ணியம் தான் என்றாலும் சில குறிப்பிட்ட தினங்களில் நீராடினால் முக்கி கிடைக்கும் என்று நம்பப் படுகிறது. பூச பவுர்ணமி, மவுனி அமாவாசை, மகா சிவராத்திரி, போன்ற தினங்கள் நீராடுவதற்கு பிரசித்தி பெற்ற தினங்களாக பக்தர்கள் கருதுகின்றனர்.
பூச பவுர்ணமியின் சிறப்பு
பூசம் அல்லது புஷ்யம் என்று சொல்லப்படும் நட்சத்திரம், நட்சத்திர வரிசையில் 8வது நட்சத்திரம். இந்த நட்சத்திரம் கடக ராசியில் இருக்கிறது. சிவாலயங்களில் பூசம் பவுர்ணமி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு கல்பத்தில் தைப்பூச தினத்தில்தான் உலகப் படைப்பு தோன்றியது. நீர் முதலில் தோன்றியது; அதில் பிரமாண்டமான நிலப்பகுதி உருவானது என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பல்வேறு ஆலயங்களில் அன்று தெப்போற்சவம் நடைபெறுகிறது.
சிவ தாண்டவம் ஆடிய நாள்
ஈசனுக்கும் உரிய நாள் தைப்பூசம். வியாக்கிரபாதர், பதஞ்சலி முனிவர்களுக்கு ஞானக்கண் தந்து, தன் திருத்தாண்டவத்தை காணச் செய்த எம்பெருமான் சிவன். அவர்களுக்காக திருநடனம் புரிந்த தினமும் ஒரு தைப்பூசத் திருநாளில்தான் என்று திருமுருக கிருபானந்தவாரியார். கூறியுள்ளார். எனவேதான் பூச பவுர்ணமி நாளில் புனித நீராடி புண்ணியம் தேடிக்கொள்கின்றனர் பக்தர்கள்.
45 லட்சம் பக்தர்கள்
பூச பவுர்ணமி நாளில் மட்டும் சுமார் 45 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. பக்தர்களின் பாதுகாப்புக்காக 22 இன்ஸ்பெக்டர்கள், 400 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.