சென்னையில் நடந்த தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற பொங்கல் விழாவில் ஆ. ராசா
சென்னை: சென்னையில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சென்னை பெரியார் திடலில் 25, 26, 27 ஆகிய 3 தேதிகளில் நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்ச்சியில் புத்தர் கலைக்குழுவினரின் பறையாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். தொடர்ந்து நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில் 6 பல்துறை தமிழ் பெருமக்களுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற தலைவர் வரியியல் அறிஞர் இராசரத்தினம் தலைமை வகித்தார். விருதினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வழங்கினார்.
நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் லயோலா இந்தியன் குழுவினரின் தப்பாட்ட நிகழ்ச்சி, பொன்னேரி சுப்பிரமணிய ஆசான் சிலம்பாட்டக் குழுவினரின் வீரவிளையாட்டுகள், வேடிக்கை விளையாட்டுகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் 4 பேருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. விருதினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா கலந்து கொண்டார். 3வது நாள் நிகழ்ச்சியாக பெரியார் ஊடகத்துறை சார்பாக குறும்பட போட்டி நடைபெற்றது. முதல் இரண்டு நாள் நிகழ்ச்சியிலும் உணவுத் திருவிழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். பல்வேறு விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.