இந்தியாவில் அடுத்த சாதனை 'K5'... கடலுக்கடியிலிருந்து தாக்கும் ஏவுகணை!
டெல்லி: கடலுக்கடியில் இருந்து நீர்மூழ்கிகள் மூலம் ஏவப்பட்டு 1,500 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று இலக்குகளை தாக்கும் சக்தி படைத்த ஏவுகணை சோதனையை நடத்தி இந்தியா வெற்றியடைந்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத ஒரு இடத்திலிருந்து வங்காள விரிகுடா பகுதியில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
K5 என்ற இந்த ஏவுகணை சோதனை கடலுக்கடியில் நிறுவப்பட்ட போன்டூன் சோதனை மேடையிலிருந்து செய்யப்பட்ட போது அனைத்து விதமான சோதனை இலக்குகளையும் இந்த ஏவுகணை நிறைவேற்றியதாக டி.ஆர்.டி.ஓ தலைவர் வி.கே.சரஸ்வத் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
Submarine launched ballistic missile என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்ததன் மூலம் இந்தியா நியூக்ளியர் 'ட்ரையட்' (தரை, வானம், கடல்) என்றழைக்கப்படும் முத்திறன் அணு ஏவுகணைகளை கொண்ட நாடாக பரிணமித்துள்ளது.
அது என்ன நியூக்ளியர் ட்ரையாட்?
தரைவழி, வான்வழி கடல்வழி என மூன்று விதத்திலும் அணுகுண்டுகளை அல்லது அணு வெடிபொருட்களை பயன்படுத்தும் ஆயுதங்களை தயாரித்தால் அதற்கு பெயர்தான் நியூக்ளியர் ட்ரையாட்.
வான், தரைவழி தாக்குதல்கள்
எதிரிகளை தாக்க குண்டுகளை வானிலிருந்து விமானங்கள் மூலம் வீசலாம். தரையிலிருந்து ஏவுகணைகள் கொண்டு வெகு தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கலாம்
நீருக்கடியில் இருந்து தாக்குதல்
நீருக்கடியிலிருந்து ஏவுகணை மூலம் வெகு தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கலாம். இதற்கு சப் மெரின் லான்ச்ச்டு பாலிஸ்டிக் மிசைல் (SLBM)என்று பெயர். இந்த தாக்குதலை எதிரிகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
நாங்களும் தயாரிப்போமே!
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடி நம் இந்தியாதான் இப்போது நியூக்ளியர் ட்ரையாட் வல்லமை கொண்ட நாடாக உள்ளது.
எதிரிகள் தாக்கினால்!
இந்தியா இதை தயாரித்தாலும் இதை பயன்படுத்தி தானாக முதல் தாக்குதலில் இறங்காது தேவைப்பட்டால் எதிர் தாக்குதலுக்கு மட்டுமே உபயோகிக்கும் என்றார் சரஸ்வத்.