ஐசியுவில் பெண் நோயாளியை கற்பழித்த மும்பை டாக்டருக்கு 10 ஆண்டு சிறை
தானே: நவி மும்பை மருத்துவமனையில் ஐசியுவில் இருந்த பெண் நோயாளியை கற்பழித்த டாக்டர் விஷால் வான்னேவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் தானே மாடர்ன் கல்லூரி மைதானத்தில் நடந்த துர்கா பூஜையில் தனது கணவர், குழந்தைகள் மற்றும் உறவினருடன் கலந்துகொள்ள வந்த 30 வயது பெண்ணுக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து வஷியில் உள்ள லோட்டஸ் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் நவி மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐசியு பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அப்போது இரவு நேரத்தில் அவருக்கு துணையாக ஒரு நர்ஸ் இருந்துள்ளார். நர்ஸுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்ததால் டாக்டர் விஷால் வான்னே(26) அவரை ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பிவிட்டார். பின்னர் ஐசியுவில் இருந்த அந்த பெண்ணுக்கு மயக்க ஊசி போட்ட டாக்டர் பலமுறை அவரை கற்பழித்துள்ளார். இது அதிகாலை 2 மணியில் இருந்து நடந்துள்ளது.
மறுநாள் காலை அப்பெண் நடந்தவற்றை தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அவர் போலீசில் புகார் கொடுக்க அவர்கள் டாக்டரை கைது செய்தனர். இந்த வழக்கு தானே கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் சிகிச்சைக்கு வந்த நோயாளியை கற்பழித்த டாக்டர் விஷாலுக்கு நீதிபதி ஆர்.டி. சாவந்த் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
முன்னதாக அப்பெண்ணின் கணவர் கூறுகையில், எனது மனைவியின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை பார்க்க சம்பவம் நடந்த இரவில் நான் 2 முறை ஐசியுக்கு சென்றேன். ஆனால் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இரவில் ஓய்வெடுக்கச் சென்ற நர்ஸ் மறுநாள் காலை 5.30 மணிக்கு தான் ஐசியு அறைக்கு திரும்பியுள்ளார். அந்த அறையில் இருந்த இன்னொரு நோயாளி நடந்தது எதுவும் தெரியாமல் அசந்து தூங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications