பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: நத்தம் நீதிமன்றத்தில் 'அட்டாக் பாண்டி' கோஷ்டியினர் 7 பேர் சரண்!
நத்தம்: திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வலதுகரமாக இருந்தவருமான பொட்டு சுரேஷ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நீதிமன்றத்தில் 7 பேர் சரணடைந்துள்ளனர். சரணடைந்தோர் மற்றொரு திமுக பிரமுகரான அட்டாக் பாண்டி கோஷ்டியை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் சத்யசாய் நகர் பகுதியில் கடந்த வியாழன்று மாலை பொட்டு சுரேஷ் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திமுகவின் உட்கட்சி மோதலால் அவர் கொல்லப்பட்டாரா? அல்லது தொழில் போட்டி காரணமாக படுகொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன் உட்பட 42 திமுகவினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் பொட்டு சுரேஷின் மனைவி, சகோதரர்கள் உள்ளிட்டோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்தக் கொலையில் மற்றொரு திமுக பிரமுகரான அட்டாக் பாண்டி கோஷ்டிக்கு தொடர்பிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வந்தனர். அட்டாக் பாண்டி தலைமறைவானதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அட்டாக் பாண்டி கோஷ்டியையும் போலீஸ் தேடி வந்தது.
இந்நிலையில் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் திண்டுக்கல்லையடுத்த நத்தம் நீதிமன்றத்தில் 7 பேர் இன்று காலை சரணடைந்தனர். மதுரை கீரைத்துறையை சேர்ந்த சபாரத்தினம், சந்தானம்,,ராஜூ,,லிங்கம்,சேகர்,,செந்தில்,கார்த்திக் ஆகியோர் சரணடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மற்றொரு திமுக பிரமுகரான அட்டாக் பாண்டி கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.