கோடையில் சென்னைக்கு குடிநீர் பஞ்சமா?: சட்டசபையில் விவாதம்!!
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் சவுந்தர்ராஜன், சென்னை மாநகராட்சி பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதற்கு ஏற்ப குடிநீர் தேவையும் அதிகரிக்கிறது. அனைவருக்கும் குடிநீர் கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுத்திருந்தாலும் இப்போது பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு உள்ளது. அப்படி என்றால் அதை தீர்க்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் கேபி முனுசாமி, சென்னை மக்களுக்கு மட்டுமல்ல, சென்னைக்கு வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கும் தடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு ஒருநாளைக்கு 831 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. ஏப்ரல், மே மாதம் வரை நீர் ஆதாரம் உள்ளது. நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைவுபடுத்தி அந்த தண்ணீரையும் விரைவில் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலமும் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். எனவே சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்றார்.
பின்னர் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. மேஜர் சாமி, மேலூர் தொகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் கடந்த ஆட்சிலேயே கேட்டோம். ஒவ்வொரு மானிய கோரிக்கையின்போதும் இதுபற்றி பேசாத நாளே கிடையாது. கடந்த ஆட்சியில் இந்த வருடம் அடுத்த வருடம் என காலம் கடத்தினர் என்றார்.
இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது 'ஏய்' என்று யாரோ சொல்ல, மேஜர் சாமியோ, சபாநாயகர் அவர்களே, என்னைப் பார்த்து 'ஏய்' என்கிறார்கள். இது சரியல்ல என்றார்.
இதைத் தொடர்ந்து தேமுதிகவின் பாஸ்கர் பேசுகையில், தர்மபுரி நகருக்கு வாரம் ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. ஒகேனக்கல் குடிநீர் திட்டம் டிசம்பருக்குள் கிடைக்கும் என்று கூறினீர்கள். எப்போது தண்ணீர் கிடைக்கும் என்று கேள்வி கேட்டார். ஒகேனக்கல் குடிநீர் தர்மபுரி நகருக்கு வந்துவிட்டது. விரைவில் முதல்வர் திருக்கரங்களால் காவிரி தண்ணீர் வந்து சேரும் என்று அமைச்சர் முனுசாமி பதிலளித்தார்.
சட்டசபையில் இன்றைய விவாதத்தில் கலந்து கொண்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.