அதிகரிக்கும் மின்வெட்டு அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்!
நெல்லை: தமிழ்நாட்டின் மாற்றமுடியாத தலையெழுத்தாகிவிட்ட மின்வெட்டுப் பிரச்சினை என்று தீரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் பள்ளி மாணவ மாணவிகள். தேர்வு நேரம் நெருங்கும் சமயத்தில் மின்வெட்டு மீண்டும் அதிகரித்து வருவதால் கலக்கத்தில் உள்ளனர் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்.
தமிழ்நாட்டில் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் 16 மணிநேரம் வரை நீடித்த மின்வெட்டு இருந்தது. காற்றின் தயவாலும், புயலின் புண்ணியத்தாலும் சில நாட்களுக்கு மின்வெட்டு சுமாராக இருக்கும். பின்னர் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மின்வெட்டு பிரச்சினை தலை தூக்கிவிடும்.
கடந்த ஒரு மாதகாலம் வரை திருப்பூர், கோவை, நெல்லை மட்டுமல்லாது பெரும்பாலான மாவட்டங்களில் மின்வெட்டுப் பிரச்சினை சுமாராக இருந்தது. மதியம் 2 மணிநேரமும் இரவில் இரண்டு மணிநேரமும் மட்டுமே மின்சாரம் தடை பட்டது. அடடா இனி கரண்டு பிரச்சினை இருக்காது ஜாலியா சீரியல் பார்க்கலாம் என்று நினைத்திருந்த இல்லத்தரசிகளின் தலைகளில் இடியாக இறங்கியுள்ளது மின்வெட்டு.

வெயில் அதிகரிப்பு
நவம்பர், டிசம்பரில் மழை பெய்ததாலும், ஜனவரியில் பனி கொட்டியதாலும் மின் நுகர்வு குறைந்ததால் மின்வெட்டு குறைந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பனி விலகி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மின்விசிறி, ஏசி, ரெப்ரிஜிரெட்டர் போன்ற மின்சாதனங்களில் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின் நுகர்வும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மின்வெட்டும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிகரித்துள்ளது.

கொசுத் தொல்லை தாங்க முடியலையே!
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவுகளில் மின்சாரம் தடைபடுகிறது. இதனால் சரியானமில்லை. தவிர காதருகில் வந்து ரீங்காரமிடும் கொசுக்கள் அவ்வப்போது ரத்தத்தை ருசித்து விட்டு தூங்கவிடாமல் செய்கிறது. இந்த கொசுக்களை கொல்ல கையில் பேட் வைத்துக் கொண்டு படுக்கவேண்டியிருக்கிறது.

20 மணிநேரம் மின்வெட்டு
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காற்று வீசும் போது மின்தடை சற்று குறைக்கப்பட்டது. ஆனால் இந்த சீசனுக்கு முன்னும், பின்னும் 16மணிநேரம் மின்சாரம் தடை பட்டது. கிராமப்பகுதிகளில் 18 முதல் 20 மணி நேரம் வரை மின்வெட்டு அமுலுக்கு வந்ததால் அவர்களது இயல்பு வாழ்க்கை முடங்கியது.

மீண்டும் 16 மணிநேரம்
காற்றாலை மின் உற்பத்தியும் கணிசமாக குறைந்து விட்டது. புதிய மின் உற்பத்தி திட்டங்களும் அமுலுக்கு வராத நிலையில் நெல்லை மாவட்டத்திலும் மின் வெட்டு நேரம் கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகரித்துவிட்டது.
காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மதியம் 12 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இரவுகளிலும் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை மின்சாரம் அமல்படுத்தப்படுவதால் எஸ்எஸ்எல்சி, பிளஸ்டூ பொது தேர்வு எழுதும் மாணவர்கள் படிக்க முடியாமல் கலக்கம் அடைந்துள்ளனர்.

எப்போ தீரும் மின்வெட்டு?
மே மாதம் சரியாகும், அக்டோபரில் தீரும், ஜனவரியில் சிக்கல் இருக்காது என்று அறிக்கைவிட்டுக் கொண்டுதான் இருக்கிறார் தமிழக அமைச்சர். ஆனால் மின்வெட்டுதான் தீர்ந்த பாடில்லை என்பது பொதுமக்கள், மாணவர்களின் ஆதங்கம்.












Click it and Unblock the Notifications