ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே துணை மின் நிலையத்தில் தீ: இருளில் மூழ்கிய 14 கிராமங்கள்
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள துணை மின் நிலையத்தில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 கோடி மதிப்புள்ள டிரான்ஸ்பார்மர்கள் எரிந்து நாசமானதால் 14 கிராமங்களில் மின்வினியோகம் தடைபட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவிலுக்கான துணை மின் நிலையம் வலையபட்டியில் உள்ளது. இங்கிருந்து பாட்டக்குளம், குன்னூர், கிருஷ்ணன்கோவில், வலையபட்டி, மங்களம் உள்ளிட்ட 14 கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இந்த மின் நிலையத்தில் நேற்று இரவு 10 மணி அளவில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. ஒரு டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ மற்ற டிரான்ஸ்பார்மர்களுக்கும் பரவியதில் அவை வெடித்துச் சிதறின.
இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. டிரான்ஸ்பார்மர்கள் வெடித்த சத்தம் கேட்டு அருகில் உள்ள கிராம மக்கள் வீதிகளில் வந்து நின்றனர். துணை மின் நிலையத்தில் தீப்பிடித்ததைப் பார்த்த அவர்கள் இது குறித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து திருத்தங்கல், வத்திராயிருப்பு, ராஜபாளையம், டி.கல்லுப்பட்டி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் கோட்ட செயற்பொறியாளர் பழனிவேல் கூறுகையில்,
துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்புள்ள டிரான்ஸ்பார்மர்கள் எரிந்து நாசமாகின. இதனால் 14க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்வினியோகம் தடைபட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர்களை சரிசெயய் 15 நாட்கள் வரை ஆகலாம். அதனால் அதுவரை கிராம மக்களின் அத்தியாவசிய பணிகளுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். முழுமையாக மின்சாரம் வழங்க 15க்கும் மேற்பட்ட நாட்கள் ஆகும் என்றார்.