அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் பாஜக உறுதி: கும்பமேளாவில் ராஜ்நாத் சிங்
கும்ப மேளாவுக்கு தற்போது இந்து மதத் தலைவர்கள் மட்டுமல்லாமல், கட்சித் தலைவர்களும் கூட செல்ல ஆரம்பித்துள்ளனர். லோக்சபா தேர்தல் காலம் என்பதால் சாதுக்களின் ஆதரவைப் பெறும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
அதன்படி பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இன்று கும்ப மேளாவுக்கு வந்தார். அங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடினார். ராஜ்நாத் சிங்கின் கும்பமேளா வருகை, பாஜக மீண்டும் ஹிந்துத்வா கொள்கையை தீவிரமாக கையில் எடுக்கப் போவதை உணர்த்துவதாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதை நிரூபிப்பது போல பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், அயோத்தியில் ராமர் கோவில் நிச்சயம் கட்டப்படும். அதில் பாஜக உறுதியுடன் உள்ளது என்று கூறினார். அயோத்தியில் ராமர் கோவில் என்பது பாஜகவின்திட்டம் என்றும் அவர் கூறினார்.
கும்பமேளாவில் விஎச்பி - ஆர்எஸ்எஸ் கூட்டம்
இதற்கிடையே, கும்பமேளா நடைபெற்று வரும் நேரத்தில், அந்த இடத்தில் வைத்து விஎச்பியும், ஆர்எஸ்எஸ்ஸும் இணைந்து ஒரு கூட்டத்தைப் போட்டுள்ளன. இதுகுறித்து விஎச்பி தலைவர் அசோக் சிங்கால் கூறுகையில், போராட்டம் தேவைப்பட்டால் நாம் போராடவும் தயாராக இருக்க வேண்டும். ராமர் கோவிலை கட்டியே தீர வேண்டும். மக்கள் தான் கோவிலை தீர்மானிக்க வேண்டுமே தவிர கோர்ட்டுகள் அல்ல என்றார்.
மோடியும் கும்பமேளாவுக்கு வருகிறார்
அதேபோல நரேந்திர மோடியும் பிப்ரவரி 12ம் தேதி அங்கு செல்லப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. முதல்வரான பின்னர் அலகாபாத்துக்கு மோடி வருவது இதுவே முதல் முறை என்பதால் இந்த விசிட் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த வாரம் ஆர்.எஸ்.எஸ். பாஜக மற்றும் விஎச்பி தலைவர்களின் கூட்டம் நடந்தபோது அதில், இந்துத்வாவை தொடர்ந்து தீவிரமாகக் கடைப்பிடிக்க உறுதி பூணப்பட்டது. இந்தப் பின்னணியில் சாதுக்கள் கூடும் கும்பமேளாவுக்கு மோடி வருவது பல்வேறு எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.
விஸ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் கூட்டத்தைத் தொடர்ந்து மோடி கும்ப மேளாவுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.