புதன் அசதி… வியாழன் காதல்… வெள்ளி அழகு!...இது பெண்கள் கால்குலேசன்!!
லண்டன்: அலுவலகமோ... வீடோ... வெள்ளிக்கிழமை என்றாலே பெண்கள் தனி அழகுடன்தான் திகழ்வார்கள். தலைக்கு குளித்துவிட்டு ஸ்பெசலாக உடுத்திக்கொண்டு அப்படியே முகத்தில் அழகு தாண்டவமாடும். ஆனால் புதன்கிழமைகளில் அதற்கு நேர்மாறாக பெண்கள் மாறிவிடுவார்கள்.
பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு புதன்கிழமை பிற்பகல், 3:30 மணிக்கு தங்களின் இயல்பான வயதை விட, மிகவும் வயதானவர்களாகத் தோற்ற மளிக்கின்றனர்" என இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
"செயின்ட் த்ரோப்ஸ்' நிறுவனம் பணிபுரியும் பெண்களிடம் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. அதில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன. 12 சதவீதம் பேர் புதன்கிழமைகளை அதிக சுமை தரும் நாட்களாக தெரிவித்துள்ளனர்.
கடுமையான பணிச்சுமை
புதன்கிழமைகளில் கடும் பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறது. வாரக் கடைசியில் ஏற்பட்ட அழுத்தமும், புதன்கிழமைகளில் ஒன்றாக சங்கமிப்பதால் அன்றைய தினத்தில் பெண்கள் அவர்களது இயல்பான வயதைக் காட்டிலும் அதிக வயது உடையவர்களாகத் தெரிகின்றனர்.
காதல் வசப்படும் வியாழன்
அதே நேரத்தில் வியாழக்கிழமைகளில் பெண்களைப் பொறுத்தவரை அன்பாகவும் காதல் வசப்படுபவர்களாகவும் உள்ளனர். இதன் காரணமாகத் தான் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் மிகவும் அழகானவர்களாக தெரிகின்றனராம். அதனால்தான் மகிழ்ச்சியாகவும் உள்ளனராம்.
மகிழ்ச்சி தரும் வெள்ளி
60 சதவீத பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். பெண்களில் 25 சதவீதத்தினருக்கும் மேல், பணிச்சுமை அல்லது பிற காரணங்களால், மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
ஓய்வு இல்லாத புதன்
புதன்கிழமைகளில் மதிய உணவு இடைவேளையின் போது கூட ஓய்வில்லாமல் பணியாற்ற வேண்டியுள்ளதாக, 19 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர் என்று இந்த ஆய்வை நடத்திய, "செயின்ட் த்ரோப்ஸ்' நிறுவனத்தை சேர்ந்த நிபுணர் நிகோலா ஜாஸ் கூறியுள்ளார். பெண்களில், மூன்றில் ஒரு பகுதியினருக்கு, புதன்கிழமைகளில் மன அழுத்தம் ஏற்படுகிறதாம்.
அதிகரிக்கும் வயது
குறிப்பாக, பிற்பகல் 3:30 மணி அளவில் அதிகப்படியான அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தான் பெண்கள் தங்களின் இயல்பான வயதைக் காட்டிலும், மிகவும் வயதானவர்களாக தெரிகின்றனர்.
திங்கட்கிழமை தூக்கமின்மை
46 சதவீத பெண்கள் வார இறுதி நாட்களில் மதுபானங்களை குடிக்கின்றனர். இதனால் திங்கள் கிழமைகளில் தூக்கமின்மையால், 37 சதவீதம் பேர் அவதிப்படுகிறார்கள். இதனால் டென்சனும் சேர்ந்து கொள்கிறது. இதுவும் முதிர்ச்சியை காட்டிக் கொடுப்பதற்கான மற்றொரு முக்கிய காரணமாகும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் சகஜநிலைக்கு திரும்ப இரண்டு நாட்கள் ஆகும், இவ்வாறு ஆய்வாளர் நிகோலா ஜாஸ் தெரிவித்துள்ளார்.