பஞ். தேர்தல் வேட்பாளருக்கு விசுவாசத்தை நிரூபிக்க கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்ட 20 பேர்
அகமதாபாத்: பஞ்சாயத்து தேர்தலில் தோல்வி அடைந்த ஒரு வேட்பாளருக்கு தான் தாங்கள் வாக்களித்தோம் என்பதை அவருக்கு நிரூபிக்க 20 பேர் கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சபர்கந்தா மாவட்டம், பயத் தாலுகாவில் உள்ள தேரியா கிராமத்தில் தினேஷ் பார்மர் என்பவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் எனக்கு ஏன் நீங்கள் வாக்களிக்கவில்லை என்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடம் கேட்டுள்ளார்.
மேலும் அவரது பிரச்சார மேனேஜர் அம்ருத் லக்ஷ்மண் பார்மர் கிரமாத்தினரை அணுகி நீங்கள் தினேஷ் பார்மருக்கு வாக்களித்ததை நிரூபிக்க கொதிக்கும் எண்ணெயில் கையை விட வேண்டும். நீங்கள் அவருக்கு வாக்களித்திருந்தால் உங்களுக்கு ஒன்றும் ஆகாது என்று கூறியுள்ளார். அவர் கிராமத்தில் உள்ள 100 பேரை எண்ணெயில் கையை விடுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து நேற்று முன் தினம் இரவு அந்த கிராமத்தில் உள்ள கோவிலில் கொதிக்கும் எண்ணெயில் 20 பேர் கையை விட்டனர். இதில் 20 பேரின் கையும் வெந்து போனது.
இது குறித்து அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து தினேஷ் பார்மர் மற்றும் அம்ருதை நேற்று கைது செய்தனர். விரைவாக செயல்பட்ட போலீசாரை பாராட்டிய முதல்வர் நரேந்திர மோடி இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேரியா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே வேட்பாளரை நம்ப வைக்க கொதிக்கும் எண்ணெயில் கையைவிடும் மூடப்பழக்கம் உள்ளது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.