தமிழகத்தில் கருகும் பயிர்களை காக்க 2.44 டிஎம்சி தண்ணீர் போதும்: நிபுணர் குழு அறிக்கை
காவிரி டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் பயிர்களை காப்பாற்ற உடனடியாக 9 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது கடந்த திங்கட்கிழமை விசாரணை நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தின் தண்ணீர் தேவை அளவை அறிய நிபுணர் குழுவை அனுப்பி வைக்குமாறு மத்திய நீர்வள கமிஷனுக்கு உத்தரவிட்டது.
அதன்படி மத்திய வேளாண்மை துறை துணை ஆணையர் (பயிர்கள்) பிரதீப்குமார் ஷா தலைமையில் மத்திய நீர்வளத்துறை முதன்மை பொறியாளர்கள் மகேந்திரன், ஜேக்கப் ஆகிய 3 பேர் அடங்கிய நிபுணர் குழு நேற்று முன்தினம் தமிழகத்திற்கு வந்தது. அந்த குழு தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் ஆய்வு செய்து தங்கள் அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் அளித்தது. பின்னர் நீர்வள அமைச்சகம் அந்த அறிக்கையை நேற்று மாலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையின் விவரம் வருமாறு,
தமிழகத்தில் 14 இடங்களில் ஆய்வு செய்தோம். போதிய நீர் இல்லாத காரணத்தால் குறைவான மகசூலை விவசாயிகள் ஈட்டியுள்ளனர். கால்நடைகளுக்கும், வீட்டு உபயோகத்துக்கும் போதிய நீர் இல்லை என அப்பகுதிகளில் வசிக்கும் பெண்கள் எங்களிடம் முறையிட்டனர். அதை நிபுணர் குழு ஏற்றுக் கொள்கிறது.
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் ஒரு நாளில் மட்டும் பார்வையிட்டு தமிழகத்தில் அறுவடை செய்யப்பட்ட நிலப்பரப்பு, கருகிய பயிர்களின் நிலப்பரப்பு, தண்ணீர் தேவைப்படும் பயிர்களின் நிலப்பரப்பு ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கிட முடியாது. இருந்தாலும், சுமார் 50 சதவீத சாகுபடிப் பரப்பில் அறுவடை முடிந்துவிட்டதையும் 40 சதவீத பரப்பில் அறுவடைக்கு பயிர்கள் தயாராக உள்ளதையும் மதிப்பிட்டோம். அந்த வகையில், மீதமுள்ள 10 சதவீத சாகுபடிப் பரப்புக்கு (சுமார் 1 லட்சம் ஏக்கர்) மட்டும் தண்ணீர் தேவைப்படுகிறது.
நிலம் புயலால் பாதிக்கப்பட்டு மீண்டும் பயிரிடப்பட்டுள்ள சுமார் 55,000 ஏக்கர் நிலங்களுக்கு மட்டும் இரண்டு முறை பாசனம் தேவைப்படுகிறது. மீதமுள்ள 45,000 ஏக்கருக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. அதனால், ஒரு முறை பாசனத்துக்கு 0. 71 டிஎம்சியும், இரண்டு முறை பாசனத்துக்கு 1.73 டிஎம்சியும் தேவைப்படும் என மதிப்பிடுகிறோம். ஆகையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பாசன நீரை எதிர்கொண்டிருக்கும் பயிர்களுக்கு மொத்தம் 2.44 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இந்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது ஆய்வுக் குழுவின் அறிக்கையை பரிசீலித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது குறித்து ஆலோசிக்க கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று மாலை பெங்களூரில் நடந்தது. அந்த கூட்டத்தில் காவிரி பிரச்சனை பற்றி ஆலோசிக்கப்பட்டாலும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது என்று மட்டும் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.