தூங்கா நகரில் ஒரு திருவிழா.. மண் மணம் புகழும் 'மாமதுரை போற்றுவோம்'!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தூங்கா நகரம் என்று செல்லமாக அழைக்கப்படும் மதுரையில் நாளை இன்னொரு 'சித்திரைத் திருவிழா' தொடங்குகிறது. 3 நாட்கள் மதுரையைக் கலக்கப் போகும் இந்தத் திருவிழா மண்ணைப் போற்றும் பெருவிழா - மாமதுரை போற்றுவோம் என்ற பெயரில் நடைபெறுப் போகும் ஒரு விழா.

தமிழகத்திலேயே மிகவும் பழமையான நகரம் எது என்று கேட்டால் அது மதுரையாகத்தான் இருக்க முடியும். மிகப் பெரிய கிராமம் என்றும் செல்லமாக அழைக்கப்பட்டாலும் கூட மதுரையின் நகர அமைப்பு வேறு எந்த ஊரிலும் காண முடியாத ஒரு அற்புத விஷயமாகும். இந்த மதுரைக்கு வயது நூறு, இருநூறு இல்லை... 4000க்கும் மேலாகிறதாம்.

மதுரை மண்ணின் பெருமையையும், புகழையும், பாரம்பரியத்தையும், கலைச் சிறப்பையும் உலகுக்கு எடுத்துணர்த்தும் வகையில் மாமதுரை போற்றுவோம் என்ற பெயரில் 3 நாள் விழா எடுக்கிறார்கள்.

வருடந்தோறும் மாமதுரை போற்றுவோம்

வருடந்தோறும் மாமதுரை போற்றுவோம்

இந்த திருவிழா குறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்ஷுல் மிஸ்ரா கூறுகையில், ஒன்றுமில்லாத ஊர்களுக்கெல்லாம் டே டே என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் வருடத்தில் 293 நாட்கள் விழாக்கள் களை கட்டியிருக்கும் மதுரைக்கு இதுவரை விழா என்று எதுவுமே இல்லை. அக்குறை இனி இருக்காது. இனி வருடந்தோறும் மாமதுரை போற்றுவோம் என்ற பெயரில் 3 நாட்கள் விழா எடுக்கப்படும்.

மண்ணை நோக்கி வாருங்கள் மைந்தர்களே...!

மண்ணை நோக்கி வாருங்கள் மைந்தர்களே...!

மதுரை மண்ணின் மைந்தர்கள் பூமிப் பந்தின் அத்தனை பகுதிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்த விழாவுக்கு வர வேண்டும். அத்தனை பேரையும் மதுரை அழைத்துக்கொள்ளும் என்றார்.

நாளை தொடங்கி 10ம் தேதி வரை

நாளை தொடங்கி 10ம் தேதி வரை

மாமதுரை போற்றுவோம் விழா நாளை கோலாகலமாக தொடங்குகிறது. 10ம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக பிப்ரவரி 1ம் தேதி மதுரைக்காகத்தான் என்ற பெயரிலான மாரத்தான் ஓட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஓடினர்.

அழகர்கோவில் கல்வெட்டு

அழகர்கோவில் கல்வெட்டு

மதுரையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களிலேயே மிகப்பழைமையானது அழகர்கோயில் அருகே ஒரு பாறையில் உள்ள எழுத்துக்கள்தான். மத்திரை என்று 2,400 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்தக் கல்வெட்டுதான், மதுரை என்று எழுதப்பட்ட முதல் எழுத்து. அங்கு இருந்து மதுரை தீபத்தை தொடர் ஓட்டமாகக் கொண்டு வந்ததும், விழா ஆரம்பம் ஆகிறது.

முதல் நாள் கண்காட்சி

முதல் நாள் கண்காட்சி

முதல் நாள் விழாவில், மதுரையைப் போற்றுவோம் என்ற தலைப்பில் மதுரையைப் பற்றிய கண்காட்சி நடக்கிறது. அந்தக் கண்காட்சியில் தற்கால மதுரை, 100 ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை, 500 ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை, 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை, 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை எல்லாம் எப்படி இருந்தது என்று காட்டும் வகையில் தனித்தனியே முழு நகரத்தையும் முப்பரிமாணத் தோற்றத்தில் காட்சிப்படுத்த உள்ளனர்.

தொன்மை போற்றுவோம்

தொன்மை போற்றுவோம்

2வது நாளில், தொன்மை போற்றுவோம் என்ற தலைப்பில் விழா நடக்கிறது. அதன் முக்கியப் பகுதியாக, மதுரை நகர் முழுவதும் அலங்கார வாகன அணிவகுப்பு நடக்கிறது.

3வது நாளில் வைகையைப் போற்றுவோம்

3வது நாளில் வைகையைப் போற்றுவோம்

3வது நாளான நிறைவு நாளில், வைகையைப் போற்றுவோம் என்ற பெயரில் வைகை ஆற்றுக்குள் கண்காட்சி நடக்கிறது. அதில் வைகை உற்பத்தியாகும் இடத்தில் இருந்து மதுரையைக் கடந்து செல்வது வரை முப்பரிமாணத் தோற்றத்தில் காட்சிக்கு வைக்க உள்ளனர். அதைப்போலவே வைகையில் எடுக்கப்பட்ட அரிதான புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. அன்றைய தினம் வைகையைச் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியும், ஆற்றின் இரு கரைகளிலும் பொதுமக்கள் தீபம் ஏந்தும் நிகழ்வும் நடக்க இருக்கிறது.

நகரமே அதிசயமாக இருப்பது மதுரைதான்!

நகரமே அதிசயமாக இருப்பது மதுரைதான்!

மதுரையின் கதையை தனது காவல் கோட்டம் நாவலில் விளக்கமாக கூறியிருந்தார் ஆசிரியர் வெங்கடேசன். இந்த நூல் சாகித்ய அகாடமி விருதையும் பெற்றது. அரவான் என்ற படத்தின் கதையும் இதிலிருந்துதான் வாங்கப்பட்டது. வெங்கடேசன் மதுரை ஒரு அதிசய நகரம் என்று கூறுகிறார். அவர் கூறுகையில், நகரங்களில் அதிசயங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு நகரமே அதிசயமாக இருப்பது மதுரைதான்.

வீதியின் வரலாறு 2500

வீதியின் வரலாறு 2500

மதுரையில் உள்ள எந்த ஒரு வீதியும் 2,500 வருட வரலாறு கொண்ட வீதியாகத்தான் இருக்கிறது. அந்த வீதிகளுக்கு எல்லாம் வரலாற்றுக் காரணப் பெயரும் இருக்கிறது.

பாண்டியன் அகழ் தெரு

பாண்டியன் அகழ் தெரு

பாண்டியன் அகழ் தெரு என்றொரு தெரு இருக்கிறது. அதன் வரலாறு என்ன தெரியுமா? பாண்டியர்களின் கோட்டையைச் சுற்றி அகழி இருந்திருக்கிறது. நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கோட்டைக்கு வெளியிலும் மதுரையை விரிவுபடுத்தினர். அப்போது அந்த அகழி மூடப்பட்டது. பிறகு, அதுவே ஒரு தெருவாகி விட்டது. அதுதான் பாண்டியன் அகழ் தெரு.

மதுரையின் காவிய அழகு

மதுரையின் காவிய அழகு

மதுரை விழா பழங்கதை பேசுவதற்கோ, தற்பெருமை அடித்துக் கொள்வதற்கோ அல்ல. மதுரையின் காவிய முகத்தை வெளிக் கொண்டு வருகிற, மற்றவர்களுக்குக் காட்டுகிற ஒரு முயற்சி. நாளைக்கேகூட ஒரு நகரம் முன்னேறிவிடலாம். ஆனால், இவ்வளவு பழைமையான, பாரம்பரியமான விஷயம் வேறு எந்த நகருக்கும் வாய்க்காது.

நகரெங்கும் ஓவியங்கள் - சிற்பங்கள்

நகரெங்கும் ஓவியங்கள் - சிற்பங்கள்

விழாவையொட்டி மதுரை நகரம் முழுவதும் புதுப் பொலிவு பெற்றுள்ளது. சுவர்களில் அலங்கார ஓவியங்கள் கண்ணைப் பறிக்கின்றன. விளக்குத்தூண், மேலவாசல் கோட்டை, பழங்காநத்தம் ரவுண்டாரா பகுதியில் வைக்கப்பட்டுள்ள முப்பரிமாண காட்சிகள் மக்களை கவர்ந்திழுத்து வருகின்றன.

ஏற்கனவே தூங்கா நகரம் மதுரை.. இந்த விழாவுக்காக மதுரைக்காரர்கள் இரவு பகலாக ஆர்வத்துடன் காத்துக் கிடக்கின்றனராம். வாருங்கள், நாமும் மதுரையைப் போற்றுவோம்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+