ராவோடு ராவாக பஸ் ஸ்டாப்பை ஆட்டையப் போட்ட மதுரை திருடர்கள்
மதுரை: மதுரையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பஸ் நிறுத்தத்தை அப்படியே அறுத்து எடுத்துக் கொண்டு போயுள்ளது ஒரு திருட்டுக் கும்பல்.
மதுரை நகரில் பல இடங்களில் பஸ் நிறுத்தங்களில் புத்தம் புதிதாக பளபளக்கும் ஸ்டீல் கம்பிகளால் ஆன நவீன பஸ் நிறுத்தங்கள், நிழற்குடைகள் போடப்பட்டு வருகின்றன.
ஒரு நிறுத்தம் அமைப்பதற்கு ஆகும் செலவு ரூ.4 லட்சம். நவீன வகையில், 3 தூண்கள் பூமியில் இருந்து எழுப்பி, அவற்றில் துருப்பிடிக்காத ஸ்டீல் வகை உலோகத்தால் ஆன கம்பிகள் வரிசையாக அமைக்கப்பட்டு, சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அமர்ந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை நகரில் பல இடங்களில் இந்த வகை நவீன நிழற்குடைகளுக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். இந்நிலையில், இவற்றைத் திருடி விற்கும் கும்பலும் இப்போது மதுரையில் தலை தூக்கியுள்ளது.
நேற்று நள்ளிரவில், மதுரை - திண்டுக்கல் சாலையில் இந்த உலோக பஸ் நிறுத்தத்தை முழுவதுமாக அப்படியே அறுத்துச் சென்றுள்ளது ஒரு கும்பல். இது போல் 7 இடங்களில் உள்ள நிறுத்தங்களை அறுக்க முயற்சித்துள்ளதாகத் தெரிந்துள்ளது. இன்று அதிகாலை வழக்கம்போல் பஸ்ஸுக்காக நிறுத்தம் வந்த பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சி. அந்த இடத்தில் பஸ் நிறுத்தமே இருந்த சுவடு தெரியாமல் இரவோடு இரவாக அறுத்துச் சென்றுள்ளனர்.
கிணற்றைக் காணோம் என்று போலீஸில் புகார் கொடுத்த வடிவேலு பிறந்த ஊரில் இப்படி ஒரு திருட்டு நடந்திருப்பதை அனைவரையும் அதிர வைத்துள்ளது.