ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் ஆர்பாட்டம்
இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை புத்தகயாவிற்கும், திருப்பதிக்கும் வருகிறார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும், தமிழ் இன உணர்வாளர்களும் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 10 மணியளவில் வகுப்புகள் துவங்கியவுடன் தமிழியல் துறை வாயிலிலிருந்து ஒவ்வொரு வகுப்பாக மாணவர்கள் வெளியேறி கலைத்துறை, அறிவியல் புலம், பொறியியல் புலம் என ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டனர்.
அண்ணாமலைப் பல்கலைக் மொழிப்போர் ஈகி இராசேந்திரன் சிலை துவங்கி பேரணியாக வந்து சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராடிய மாணவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் வாக்கு வாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. பிறகு தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். மாணவர்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.













Click it and Unblock the Notifications