திருட்டு விசிடியில் ரிலீஸானது விஸ்வரூபம்... டிவிடிக்களை விற்ற 4 பேர் கைது: 1 லட்சம் டிவிடி பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விஸ்வரூபம், டேவிட், சமர் உள்ளிட்ட புதுப்பட டிவிடி, சிடிக்களை விற்பனை செய்த நான்குபேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த 1,10,000 டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடியில் விஸ்வரூபம் உள்ளிட்ட பல புதிய படங்களின் டிவிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக சிபிசிஐடி புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டிஐஜி ஜான்நிக்லசன் தலைமையில் டவுன் ஏஎஸ்பி மகேஷ், எஸ்ஐ கந்தசாமி மற்றும் ஏராளமான போலீசார் தூத்துக்குடியில் உள்ள பல கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் விஸ்வரூபம், கண்ணா லட்டு தின்ன ஆசையா, டேவிட், சமர் உள்ளிட்ட புதிய படங்களில் புதிய டிவிடிக்களை விற்பனைக்கு வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்த தூத்துக்குடியை சேர்ந்த முஸ்தபா மகன் யாசர், ஜமால் மகன் காதாமுகைதீன், அமீர் மகன் சபீர் பாட்ஷா, மற்றும சிதம்பரம் நகரை சேர்ந்த பேச்சியப்பன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான மைதீன், செய்யது கனி முகமது ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.
இவற்றை பதிவு செய்ய பயன்படுத்திய கம்யூட்டர், பென் டிரைவ், 4 செல்போன்கள், இரு பைக்குகள் மற்றும் நூற்றுக்கணக்கான புதிய மற்றும் உரிமம் பெறாத டிவிடிக்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதுகுறித்து டிஐஜி ஜான்நிக்கல்சன் கூறியதாவது:
தூத்துக்குடியில் விஸ்வரூபம் படத்தின் டிவிடிக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு முக்கிய இடங்களில் உள்ள பல இடங்களில் கடைகளில் சோதனை நடத்தினோம். இதில் விஸ்வரூபம் படம் பென் டிரைவ் மூலம் டிவிடிக்களில் பதிவு செய்து கொடுக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த சோதனையின் போது உரிமம் பெறாத பல புதிய படங்களின் டிவிடிக்கள் உள்ளிட்ட 1 கோடி மதிப்பிலான பொருட்கள் அவற்றை பிரதியெடுக்கப் பயன்படுத்திய உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications