மத்திய பிரதேசம்:சட்டசபை தேர்தலில் காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா!
போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை முன்னிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கிறது.
மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் மும்முரம் காட்டி வருகிறது. இதே மாநில முதல்வராக இருந்தவர் திக்விஜய்சிங்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அம்மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி நடைபெற்று வருகிறது. சிவ்ராஜ்சிங் சவுகான் முதல்வராக இருந்து வருகிறார்.
உத்தரபிரதேசம், பீகார், குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் முன்னிலைப்படுத்தக் கூடிய முதல்வர் வேட்பாளர்கள் காங்கிரஸ் வசம் இல்லை என்பதாலே தோல்வி அடைந்துவருவதாக அக் கட்சி கருதுகிறது.
இதனால் மத்திய பிரதேசத்தில் தற்போதைய மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை முன்னிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் மாதராவ் சிந்தியாவின் மகன். இவரை முன்னிறுத்தினால் எளிதில் வெற்றி பெற முடியும் என்பது காங்கிரஸின் கணக்கு.
ஆனால் காங்கிரஸுக்கே உரித்தான கோஷ்டி பூசல் இங்கும் இல்லாமல் இல்லை. காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான அர்ஜூன்சிங்கின் மகன் அஜய்சிங்கும் முதல்வர் வேட்பாளர் கனவில் இருந்து வருகிறார்