டிவியைப் பார்த்து தான் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை தெரிந்துகொண்டோம்: குடும்பத்தார்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சொபோரைச் சேர்ந்த தீவிரவாதி அப்சல் குரு நாடாளுமன்றத்தை தாக்கிய வழக்கில் நேற்று காலை 8 மணிக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவனுடைய உடல் திகார் சிறையிலேயே புதைக்கப்பட்டது. அப்சல் குரு தூக்கு குறித்து அவனது குடும்பத்தாருக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் தகவல் அனுப்பப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால் தங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை என்று அவனது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப்சல் குருவின் உறவினர் யாசீன் அகமது செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அப்சல் குரு தூக்கிலிடப்படுவது குறித்து அரசு எங்களுக்கு தெரிவிக்கவில்லை. டிவியைப் பார்த்து தான் அவர் தூக்கிலிடப்பட்டதை தெரிந்து கொண்டோம். டெல்லியில் உள்ள எங்கள் நண்பர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இது குறித்து தெரியவில்லை. மனிதாபிமான அடிப்படையிலாவது எங்களை அவரை சந்தித்து பேச, அவரது கடைசி ஆசையை கேட்க அனுமதித்திருக்கலாம் என்றார்.
தனது கணவரின் இறுதிச் சடங்குகளை தங்கள் மதப்படி செய்ய அனுமதி அளிக்குமாறு திகார் சிறையின் டைரக்டர் ஜெனரலுக்கு அப்சல் குருவின் மனைவி தபசும் வழக்கறிஞர் பன்சோலி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.