காவிரியில் கர்நாடகம் உண்மையிலேயே தண்ணீர் திறந்து விட்டதா?: சுப்ரீம் கோர்ட்டிலும் மேல் முறையீடு
தமிழகத்தில் ஆய்வு செய்த மத்திய நிபுணர் குழு பயிர்களை காக்க 2.44 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்தது. இதையடுத்து தமிழகத்திற்கு உடனடியாக 2.44 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு கடந்த வாரம் உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டது என்று கூறப்பட்டது. ஆனால் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டு 5 நாட்களாகியும் இன்னும் அது தமிழகத்திற்கு ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் உச்ச நீதிமன்ற உத்தரவை மறுபரீசிலனை செய்யக் கோரி கர்நாடக அரசு நேற்று மேல்முறையீடு செய்துள்ளது.
அது தனது மனுவில் கூறியிருப்பதாவது,
உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழகத்திற்கு 2.44 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட்டால் கர்நாடகாவின் காவிரி டெல்டா பகுதியில் அதிலும் குறிப்பாக பெங்களூரில் தண்ணீர் கஷ்டமாகிவிடும். கடந்த ஜனவரி 31ம் தேதி வரை காவிரி டெல்டா நீர் தேக்கத்தில் மொத்தமே 14.27 டிஎம்சி நீர் தான் இருந்தது. நீர் தேக்கத்திற்கு கடந்த மே மாதம் வரை 3.9 டிஎம்சி தண்ணீர் வந்தது. ஆக மொத்தம் 18.17 டிஎம்சி தண்ணீர் உள்ளது. ஆனால் அடுத்த பருவமழை காலம் வரும்வரை எங்களுக்கு 24.25 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது.
இருக்கும் தண்ணீரில் 11.60 டிஎம்சி நீர் வரும் ஜூன் 15ம் தேதி வரை குடிநீர் பயன்பாட்டுக்கு தேவைப்படுகிறது. பருவமழை காலம் குறிப்பிட்ட நேரத்தில் துவங்காவிட்டால் மேலும் 1.45 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். மேலும் பயிர்களுக்கு, மீதமுள்ள தேவைகளுக்கு இன்னொரு 11.20 டிஎம்சி தண்ணீர் தேவை.
கர்நாடகத்திற்கே 6.08 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறையாக உள்ள நிலையில் தமிழகத்திற்கு 2.44 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட்டால் பற்றாக்குறை 8.52 டிஎம்சியாக அதிகரிக்கும்.
தமிழகத்தில் உள்ள சம்பா பயிர்களுக்கு 1.30 டிஎம்சி நீர் போதும். அதை மேட்டூர் அணையில் இருந்தே எடுத்துக்கொள்ளலாம். மேட்டூர் அணையில் 8.6 டிஎம்சி தண்ணீர் உள்ளது.
நீர்பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தமிழகம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கர்நாடக அரசு சார்பில் ஆஜரான எஸ். நாரிமன் உள்ளிட்டோர் அடங்கிய வழக்கறிஞர்கள் குழு தங்கள் பணியில் இருந்து விலக முன்வந்துள்ளது. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை செய்லபடுத்துமாறு ஏற்கனவே நாரிமன் கர்நாடக முதல்வர் ஷெட்டரிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.