புதுவையில் மாணவர்கள் பிரச்சினை சாதி மோதலானது: வீடுகளுக்கு தீவைப்பு… பதற்றம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 30க்கும் மேற்பட்ட குடிசைகளுக்கு தீவைக்கப்பட்டன. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் எழுந்துள்ளது.
புதுவையில் மாணவர்கள் பயணம் செய்ய அரசு இலவச பேருந்துகளை இயக்கி வருகிறது. நேற்று புதுவையில் இருந்து திருக்கனூர் அருகே உள்ள சுத்துக்கேணிக்கு இலவச பேருந்து சென்றபோது சுத்துக்கேணியை சேர்ந்த 2 பிரிவு மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
இதுதொடர்பாக அவர்கள் தங்கள் ஊரில் உள்ள ஒருவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். மாணவர்கள் பிரச்சினை இருபிரிவினரிடை தகராறாக மாறியது. இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து ஒரு பிரிவினர் ஊருக்குள் திரண்டு சென்று அங்குள்ள வீடுகளை சூறையாடினார்கள். உடனே அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் கலவர கும்பலை தடியடி நடத்தி விரட்டினார்கள். இந்த மோதல் பக்கத்து ஊரான சந்தைபுதுக்குப்பம் மக்களுக்கு தெரியவந்தது. அவர்களும் 2 பிரிவாக மோதிக்கொண்டனர். அங்கு ஒரு பிரிவினர் கிராமத்துக்குள் புகுந்து 30-க்கும் மேற்பட்ட வீடுகளை சூறையாடினர். வீடுகளுக்கும் தீவைக்கப்பட்டது. வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதற்கிடையே சுத்துக்கேணியில் உள்ள ஒரு சாராய கடைக்கு ஒரு கும்பல் நள்ளிரவில் தீவைத்தது.
இதைத்தொடர்ந்து பக்கத்து கிராமமான காட்டேரிக்குப்பத்தில் சுத்துக்கேணியை சேர்ந்த சிலரை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியது. இதனால் 3 கிராமங்களிலும் ஆங்காங்கே கோஷ்டிகளாக திரண்டனர். இதனையடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பங்களால் சுத்துக்கேணி, சந்தை புதுக்குப்பம், காட்டேரிக்குப்பம், குமாரபாளையம், லிங்காரெட்டி பாளையம் ஆகிய கிராமங்களில் பதட்டம் நிலவுகிறது. அங்கு மாணவர்கள் யாரும் பள்ளிகளுக்கு செல்லவில்லை. வழக்கமாக புதுவைக்கு வேலைக்கு வருபவர்களும் பணிக்கு செல்லவில்லை.
மோதலை தடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் பிரச்சினை ஜாதிப்பிரச்சினையாக மாறிய சம்பவம் புதுவையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications