காவிரி: நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு சொல்வது என்ன?
டெல்லி: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தமிழத்திற்கு கர்நாடகம், ஆண்டுதோறும் 419 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை தொடர்ந்து மறுத்து வருகிறது கர்நாடகம்.
தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி இடையிலான காவிரி நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க கடந்த வி.பி.சிங் ஆட்சிக்காலத்தின்போது அமைக்கப்பட்டது.
என்.பி.சிங் தலைமையிலும், எம்.எஸ்.ராவ் மற்றும் சுதிர் நாராயண் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டும் செயல்பட்ட இந்த நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி தனது இறுதித் தீர்ப்பை அளித்தது.
மொத்த நீர் 740 டிஎம்சி
மொத்த நீர் இருப்பை 740 டிஎம்சியாக கணித்து, அதில் தமிழகத்திற்கு 419 டிஎம்சி, கர்நாடகத்திற்கு 270 டிஎம்சி, கேரளத்திற்கு 30 டிஎம்சி மற்றும் புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது காவிரி நடுவர் மன்றம்.
10 டிஎம்சி சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு
மேலும் 10 டிஎம்சி நீரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணத்திற்காக இருப்பு வைக்க நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இதுதவிர கசிவு உள்ளிட்ட காரணங்களால் வீணாகும் தண்ணீரின் அளவாக 4 டிஎம்சி நீர் நிர்ணயிக்கப்பட்டது.
வறட்சிக்காலத்தில்
வறட்சிக்காலத்தில் காவிரி நீர் மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும், குறைந்த அளவிலான நீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தீர்ப்பின் முக்கியப் பகுதியாகும்.
8அணைகளிலிருந்து நீர்ப் பங்கீடு
கர்நாடகம், தமிழகம் மற்றும் கேரளத்தில் உள்ள 8 அணைகளிலிருந்து காவிரி நீர் இந்த நான்கு மாநிலங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. கர்நாடகத்தில் ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர் என நான்கு அணைகள் உள்ளன. தமிழகத்தில் கீழ் பவானி, அமராவதி, மேட்டூர் என மூன்று அணைகள் உள்ளன.கேரளாவில் பனாசுரசாகர் அணை உள்ளது.
காவிரி நிர்வாக வாரியம்
இனி இந்த எட்டு அணைகளும் புதிதாக அமைக்கப்படவுள்ள காவிரி நிர்வாக வாரியத்தின் கீழ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.