ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 10 பேர் பலி
ஹைதராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இன்று இரவு 7 மணியளவில் தில்சுக் நகர் பகுதியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பை உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே உறுதிப்படுத்தியுள்ளார்.
3 இடங்களில் குண்டுவெடிப்பு
ஹைதராபாத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தில்சுக் நகர் பகுதியில் இன்று இரவு 7 மணிக்கு குண்டுவெடிப்பு நடந்தது. மொத்தம் 5 இடங்களில் குண்டுகள் வெடி்தததாக முதலில் தகவல்கள் வெளியாகின. தற்போது 3 இடமாக அது குறுகியுள்ளது.
ஆனந்த் டிபன் சென்டர், கொனார்க் மற்றும் வெங்கடாத்ரி தியேட்டர்களுக்கு அருகே குண்டுகள் வெடித்தன என்று தகவல்கள் கூறுகின்றன.

குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவித்தன. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இருப்பினும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே உறுதிப்படுத்தியுள்ளார்.
காயமடைந்தோரில் பலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
முதல் குண்டு 7.01க்கு வெடித்தது
முதல் குண்டு 7.01 மணிக்கு வெடித்தது. அடுத்து 15 நிமிடம் கழித்து மேலும் 2 குண்டுகள் வெடித்தன.
என்ஐஏ குழு விரைந்தது
குண்டுவெடிப்பு நடந்த இடத்தை தற்போது போலீஸார் சீல் வைத்துள்ளனர். அப்பகுதியில் ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். முதல் கட்ட விசாரணை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிக்காத குண்டு சிக்கியது
குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து வெடிக்காத நிலையில் ஒரு குண்டை போலீஸார் கண்டு்பிடித்து மீட்டுள்ளனர். இதே போல அப்பகுதியில் மேலும் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஹைதராபாத் முழுவதும் உஷார் நிலை
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ஹைதராபாத் நகர் முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செல்போன்கள் செயலிழந்தன
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ஹைதராபாத் முழுவதும் செல்போன் சேவைகள் செயிலிழந்தன.
முதல்வர் கிரண்குமார் ரெட்டி அவசர ஆலோசனை
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை செயலர் ஆர்.கே.சிங், ஹைதராபாத் சம்பவ இடத்துக்கு தேசிய புலனாய்வு அமைப்பு விரைந்துள்ளது. இதுவரை 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விசாரணைகளை தொடங்கியுள்ளோம். உள்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார்.
மேலும் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அவசர உதவிக்கு
ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அவசர உதவிக்கான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தில்சுக் நகர் ஆம்புலன்ஸ் சேவைக்கு - +91 9391351543, 9963857749, 9440379926 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications