கோஹினூர் வைரம் எங்களுடையது, திருப்பித் தரமாட்டோம்: யு.கே. பிரதமர் டேவிட் கேமரூன்
இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் இங்கிருந்து 105 காரட் கோஹினூர் வைரத்தை இங்கிலாந்துக்கு கொண்டு சென்றனர். அந்த வைரம் தற்போதைய இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் தாயாரின் காலத்தில் ராணியின் மகுடத்தின் மேல் பொருத்தப்பட்டது. தற்போது அந்த மகுடம் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அந்த மகுடத்தில் இருக்கும் வைரத்தை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. மகாத்மா காந்தியின் பேரன் கூட அந்த வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இது குறித்து கூறுகையில்,
ராணியின் மகுடத்தில் இருக்கும் கோஹினூர் வைரத்தை திருப்பித் தர மாட்டோம். வைரத்தை திருப்பித் தருவதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்றார்.
1997ம் ஆண்டில் இந்திய சுதந்திர பொன்விழா கொண்டாடத்தில் கலந்து கொள்ள ராணி எலிசபெத் இந்தியா வந்தார். அப்போது அவரது மகுடத்தில் இருக்கும் வைரத்தை திருப்பித் தருமாறு பல இந்தியர்கள் கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.