காவிரி: கர்நாடகாவின் அடுத்த 'அடாவடி ஆரம்பம்'- மேலாண்மை ஆணையத்துக்கு எதிர்ப்பு!
கோலார்: காவிரி தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வெளியாகும் வரை காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கக் கூடாது என்று கர்நாடகா அரசு புதிய 'முட்டுக்கட்டை' கோரிக்கையை விடுத்திருக்கிறது.
கர்நாடகாவின் கடும் எதிர்ப்பையும் மீறி உச்சநீதிமன்றத்தின் நெருக்கடியால் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை வேறுவழியின்றி மத்திய அரசு நேற்று அரசிதழில் வெளியிட்டது.
இது கர்நாடகாவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. கர்நாடகா மாநிலம் கோலாரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கூடாது என்று வலியுறுத்தி பிரதமருக்கு 2 கடிதங்கள் எழுதினேன். கடந்த 2 நாட்களுக்கு முன் அனைத்துக்கட்சி குழுவை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து அதுபற்றி வலியுறுத்தினேன். அந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டால் கர்நாடகத்தில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் குறித்து விவரமாக விளக்கினேன்.ஆனால் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. நடுவர் மன்ற விதிமுறைகளில் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்பது குறித்து சட்டப்பிரிவு எதுவும் இல்லை.
காவிரி தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கக்கூடாது. இது பற்றி பார்லிமெண்ட்டில் விவாதிக்க வேண்டும் என்றார்.