நெம்மேலியில் இருந்து சென்னைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம்: நாளை முதல் துவக்கம்
சென்னை: நெம்மேலியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் மையத்தில் இருந்து குடிநீர் விநியோகத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை துவக்கி வைக்கிறார். இங்கிருந்து நாளை முதல் சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கப்படும்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலியில் ரூ.908 கோடி செலவில் அமைக்கப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதையடுத்து இங்கிருந்து நாளை முதல் சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதையொட்டி நாளை குடிநீர் விநியோக துவக்க விழா நடைபெறுகிறது.
இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு குடிநீர் விநியோகத்தை துவக்கி வைக்கிறார். இங்கிருந்து குடிநீர் விநியோகம் துவங்கிய பிறகு சென்னையின் குடிநீர் தேவை பெருமளவு பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெம்மேலியில் இருந்து சென்னைக்கு முதல் கட்டமாக 6 முதல் 7 கோடி லிட்டர் நீர் விநியோகிக்கப்படுகிறதாம். இந்த அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு 10 கோடி லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்படுமாம்.
ஏற்கனவே மீஞ்சூரில் தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் பெறும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.