காதல்னா இப்படி இருக்கனும்.. கல்யாணம்னா இப்படி நடக்கனும்!
மதுரை: இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தனர். உருகி உருகி காதலித்தனர். இதில் கர்ப்பமானார் காதலி. இதையடுத்து வெடித்தது பிரச்சினை. காதலரின் குடும்பம் இருவரையும் பிரித்தது. சட்டப் போராட்டம் வெடித்தது. நீண்டு நெடிதாக நடந்த இந்தப் போராட்டத்தின் இறுதியில் காதலர்கள் இருவரும் கரம் பிடித்து கணவன், மனைவி ஆனார்கள் - தங்களது ஒன்றரை வயது குழந்தையின் முன்னணியில்.
மதுரை அருகேதான் இந்த சந்தோஷ சம்பவம் நடந்துள்ளது. காவல்துறை, சட்டத்துறை என சகல துறையினரும் இந்த சந்தோஷத்தின் பின்னணியில் காரணமாக அமைந்துள்ளனர்.
காதலர்களாக வலம் வந்து இன்று தங்களது பிள்ளை முன்பு திருமணம் செய்து கொண்ட மகிழ்ச்சியில் காதலர்கள் இருவரும் சந்தோஷப் பூரிப்பில் உள்ளனர்.
நடந்த கதையைப் பார்ப்போமா...?
ராமாயி மகன் ராஜேஷ் கண்ணன்
மதுரை, கூடல்புதூர் பகுதியை சேர்ந்த பாண்டி-ராமாயி ஆகியோருடைய மகன் ராஜேஷ்கண்ணன். பி.காம். பட்டதாரி. அதே கூடல்நகர் புதூர் பகுதியில் வசித்து வரும் ஜெயராமன்-முத்தலட்சுமி தம்பதியினரின் மகள் வைதேகி. இவரும் ராஜேஷ் கண்ணனும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
கலவியில் முடிந்த காதல்.. கர்ப்பமான வைதேகி
காதலிக்கும்போதே இருவரும் சேர்ந்தும் விட்டனர். இதனால் கர்ப்பமானார் வைதேகி. அப்போது அவருக்கு 18 வயது கூட நிறைவடையவில்லை.
பதறிப் போன பெற்றோர்
மகள் கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமானதால் பதறிப் போனார்கள் வைதேகியின் பெற்றோர். இதையடுத்து தங்களது மகளைத் திருமணம் செய்து கொள்ளும்படி ராஜேஷ் கண்ணனிடம் வற்புறுத்தினர். அவரும் விருப்பத்துடன்தான் இருந்தார்.
பொங்கி எழுந்த காதலரின் பெற்றோர்
ஆனால் ராஜேஷ் கண்ணனின் பெற்றோர் முடியவே முடியாது என்று மறுத்து விட்டனர். திருமணத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வைதேகியின் தந்தை போலீஸுக்குப் போய் விட்டார். போலீஸாரும் மைனர் பெண்ணை கற்பழித்ததாக ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
கைதாகி விடுதலை.. அப்பாவானார்
பின்னர் போலீஸார் ராஜேஷ் கண்ணனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார். அதன் பிறகும் பிரச்சினை ஓயவில்லை.
அழகான பெண் தேவதை பிறந்தாள்
இந்தப் பிரச்சினை ஓடிக் கொண்டிருந்தபோது வைதேகிக்கு அழகான பெண் தேவதை பிறந்தாள். ராஜேஷ் கண்ணனும், வைதேகியும் இந்த சந்தோஷத்தை சேர்ந்து கொண்டாட முடியாமல் தவித்தனர். தனிமையில் மனம் கலங்கி வெதும்பினர்.
தீவிரமடைந்த பேச்சுக்கள்
குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து வைதேகி தரப்பி்ல் எப்படியாவது மகளை ராஜேஷுடன் சேர்த்து வைக்க தீவிரமாக பேச்சுவார்த்தையில் இறங்கினர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரான சார்பு நீதிபதி ஜெசிந்தா மார்ட்டினிடம் குழந்தையுடன் வந்து வைதேகி மனு அளித்தார். இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட எஸ்.பிக்கு தெரிவிக்கும்படி வக்கீல் பாக்கியலட்சுமிக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.
எஸ்.பியின் சமரசப் பேச்சு
வக்கீல் பாக்கியலட்சுமி எஸ்.பி. பாலகிருஷ்ணனை சந்தித்து நடந்த சம்பவங்களை விளக்கினர். இதையடுத்து ராஜேஷ்கண்ணனையும், அவருடைய குடும்பத்தினரையும் அழைத்து எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொறுப்புடன் நடந்த காவல்துறை
இந்த இடத்தில்தான் காவல்துறையினர் மிகவும் பொறுப்பாகவும், அருமையாகவும் நடந்து கொண்டனர். ராஜேஷ் கண்ணன் குடும்பத்தாரை அழைத்து நிதானமாக பல விஷயங்களை விளக்கினர். மரபணு சோதனை நடத்துவோம், அப்படி நடத்தினால், ராஜேஷ் கண்ணன்தான் தந்தை என்பது நிரூபணமாகும். அப்படி ஆனால் அவர் நிரந்தரமாக சிறைக்குப் போக வேண்டும். அது அவரின் வாழ்க்கையைப் பாதிக்கும். எனவே வைதேகியுடன் சந்தோஷமாக சேர்த்து வையுங்கள் என்று அறிவுரை கூறினர்.
நீதிபதியின் அறிவுரை
அதேபோல சட்டத்துறையும் இந்தக் காதலர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது. நீதிபதி ஜெசிந்தாவே, ராஜேஷ் கண்ணன் குடும்பத்தாரை அழைத்து புத்திமதி கூறினார்.
வந்தது சம்மதம்...
இப்படி காவல்துறையும், சட்டத்துறையும் இணைந்து கொடுத்த கவுன்சிலிங்கில் மனம் திருந்தினர் ராஜேஷின் குடும்பத்தார். திருமணத்திற்குச் சம்மதித்தனர். இதையடுத்து பத்திரிக்கை அடிக்கப்பட்டது.
சோழவந்தானில் கொட்டிய கெட்டிமேளம்
வைகைக் கரையோரம் அழகுற அமைந்திருக்கும் சோழவந்தானில் உள்ள ஜெனகை நாராயணப் பெருமாள் கோவிலில் திருமணம் நடத்த முடிவாகி நேற்று கோலாகலமாக நடந்தேறியது.
பொங்கி வழிந்த சந்தோஷம்
இரு வீட்டாரும் உற்சாகத்துடன் திருமணத்தில் பங்கேற்றனர். மணப்பெண் முகத்திலோ பூரிப்புக்கு அளவே இல்லை. ராஜேஷ் கண்ணன் முகத்திலும் நிம்மதிப் பெருமூச்சு..
அப்பா, அம்மா கல்யாணத்தை வேடிக்கை பார்த்த குட்டிப் பாப்பா
இந்த திருமணத்தின் ஹைலைட்டே வைதேகி பெற்றெடுத்த குட்டிப் பாப்பாதான். தற்போது ஒன்றரை வயதாகும் அந்தக் குட்டி பாப்பா முன்புதான் வைதேகி கழுத்தில்தாலி கட்டினார் ராஜேஷ் கண்ணன். அம்மா கழுத்தில் அப்பா தாலி கட்டுவதை க்யூட்டாக பார்த்தபடி இருந்தாள் அந்தக் குட்டிக் குழந்தை.
காதலிப்பவர்களுக்கு மனதில் உறுதி வேண்டும்.. மன உறுதி இருந்தால் - கூடவே பெற்றோரின் ஒத்துழைப்பும் இருந்தால் நிச்சயம் வெல்லலாம் ... என்பதற்கு வைதேகி - ராஜேஷ் கண்ணன் காதல் ஒரு சின்ன உதாரணம்.