ஹைதராபாத் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட 2 தாய்மார்கள்
ஹைதராபாத்: ஹைதராபாத் குண்டுவெடிப்பில் 6 மாத கர்ப்பிணி தனது குழந்தையை இழந்துவிட்டார். மேலும் ஒரு தாய் தன்னுடைய இருதய நோயாளி குழந்தையை பார்க்க முடியாமல் படுத்த படுக்கையாகிவிட்டார்.
ஹைதராபாத்தில் உள்ள தில்சுக்நகரில் கடந்த வியாழக்கிழமை மாலை 2 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 16 பேர் பலியாகினர், 120 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் யசோதாவும்(30) ஒருத்தர். 6 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் கடந்த வியாழக்கிழமை வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது குண்டு வெடித்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார். கீழே விழுந்தபோது அவரது வயிறு தரையில் அடித்தது. இதில் கர்ப்பத்தில் இருந்த 6 மாத குழந்தை இறந்துவிட்டது. யசோதாவின் விலா எலும்பில் அடிபட்டது.
அதே குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர் லக்ஷ்மி(23). நல்கொண்டாவைத் சேர்ந்த அவரின் ஒன்றரை வயது மகனுக்கு இதயத்தில் கோளாறு உள்ளது. அதற்காக சிகிச்சை பெற அவர்கள் குடும்பத்தோடு ஹைதராபாத் வந்து தங்கியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு உணவு சாப்பிடுவதற்காக அவர்கள் தில்சுக்நகர் சென்றபோது குண்டு வெடித்தது.
இதில் லக்ஷ்மி மற்றும் அவரது குடும்பத்தார் 3 பேர் காயம் அடைந்தனர். லக்ஷ்மியின் காலில் பலத்த அடிபட்டுள்ளதால் அவருக்கு பலமுறை அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. இன்னும் சில மாதங்களுக்கு அவரால் நடக்க முடியாது. ஆனால் அவரது குழந்தைக்கு 3 மாதத்தில் இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே குண்டுவெடித்த இடத்தில் இருந்து 3 அடி தூரத்தில் நின்று கொண்டிருந்த புஷ்பா என்பவர் காயமின்றி தப்பித்துள்ளார். அவர் ஒரு தூணுக்கு பின் நின்றதால் காயமின்றி தப்பித்துள்ளார். ஆனால் இந்த சம்பவத்தை தன்னால் என்றுமே மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.