உறையவைத்த ரத்தத்தில் ஜெயலலிதா சிலை: கராத்தே வீரர் ஹுசைனி சாதனை
சென்னை: கராத்தே வீரர் ஹுசைனி உறைய வைத்த ரத்தத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையினை செய்து சாதனை படைத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் 65வது பிறந்த நாளை அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 65 கிலோ கேக் வெட்டி ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
மேலும் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை அதிமுகவினர் வழங்கி வருகின்றனர். இது தவிர நாக்கை வெட்டி கோயில் உண்டியலில் போடுவது, தங்களது உடம்பில் பச்சைக் குத்திக் கொள்வது, கோட்டையில் காலில் செருப்பு அணிந்து நடக்காமல் இருப்பது இப்படி பல விதமாக செய்துள்ளனர்.
இந்நிலையில் கராத்தே வீரர் ஹுசைனி, முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு 11 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து அதில் ஜெயலலிதாவின் சிலையை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து ஹுசைனி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முதல்வர் ஜெயலலிதாவின் சிலையினை உருவாக்குவதற்காக 8 ஆண்டுகள் எனது உடலில் இருந்து 24 பாட்டில் ரத்தம் எடுத்து அதைப் பாதுகாத்து வந்தேன். அத்துடன் வில்வித்தை வீரர்கள், வீராங்கனைகள் 32 பேரும் ரத்தம் கொடுத்து உதவியுள்ளனர்.
ஆண்டுக்கு 100 மில்லி லிட்டர் வீதம், முதல்வரின் 65வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் எனது 6½ லிட்டர் ரத்தத்தையும், வில்வித்தை மாணவ, மாணவியரின் 4½ லிட்டர் ரத்தத்தையும் சேர்த்து மொத்தம் 11 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து இந்த சிலையை உருவாக்கியுள்ளேன்.
உறைய வைத்த ரத்தத்தில் உருவச் சிலையை படைத்திருப்பது உலகில் இதுவே முதல் முறையாகும் என்றார்.