சுப்ரீம் கோர்ட் முதல் கீழ் கோர்ட் வரை தூங்கிக் கொண்டிருக்கும் 24,000 பாலியல் வழக்குகள்
டெல்லி: நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பாலியல் வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் குற்றங்கள் பெருகியபடி உள்ளன. பாலியல் பலாத்காரம், சில்மிஷம், அதுதொடர்பான கொலைகள், தாக்குதல், ஆசிட் வீச்சு என நாடே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் கிட்டத்தட்ட 24,000 பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
உ.பியில்தான் அதிக குற்றம்
நாட்டிலேயே உ.பியில்தான் அதிக அளவிலான பாலியல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு மொத்தம் 8215 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
விரைவு நீதிமன்றம் அமைக்க கோரிக்கை
பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க வசதியாக விரைவு நீதிமன்றங்களை உருவாக்குமாறு நாடு முழுவதும் உள்ள 21 உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கும் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் 335 வழக்குகள்
நாட்டின் உச்சநீதிமன்றமான சுப்ரீம் கோர்ட்டில் மட்டும் பிப்ரவரி 28ம் தேதி நிலவரப்படி 335 பாலியல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 8215
நாட்டிலேயே அலகாபாத் உயர்நீதிமன்றத்தில்தான் அதிக அளவாக 8215 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ம.பி. கோர்ட்டில் 3758
மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் 3758 வழக்குகளும், பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் 2717 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
பாம்பேயில் 924
நாட்டிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக கருதப்படும் மும்பையில் உள்ள, பாம்பே உயர்நீதிமன்றத்தில் 924 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னையில் 179
சென்னை உயர்நீதிமன்றத்தில் 179 பாலியல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் குமார் தெரிவித்துள்ளார். குறைந்த அளவாக உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் 26 வழக்குகள் உள்ளன.
சிக்கிமில் ஒரு வழக்கும் இல்லை
சிக்கிம் மாநிலத்தில்தான் எந்த ஒரு பாலியல் வழக்கும் அங்குள்ள கோர்ட்டில் நிலுவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.