பில் கிளிண்டன், மலாலா உட்பட 259 பேர் நோபல் பரிசுக்கு பரிந்துரை
இலக்கியம், மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் ஒருவருக்கோ அல்லது இணையராகவோ ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்படும் பெயர்களும், பரிசுக்கு தேர்வானவர்கள் பெயர்களும் ரகசியமாகவே வைக்கப்பட்டு வந்தன. எனினும், காலப்போக்கில் இப்பரிசுக்காக சில பெயர்களை பரிந்துரைப்பவர்கள், அப்பெயரை உடனுக்குடன் ஊடகங்களுக்கு தெரிவித்துவிடுகின்றனர்.
2012-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரையில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பாகிஸ்தானில் பெண் கல்விக்காக தலிபான்களை எதிர்த்து போராடி, தலை மற்றும் உடல் முழுக்க தாலிபான்களின் குண்டுகளை ஏந்திக்கொண்ட மாணவி மலாலா உட்பட 209 தனி நபர்கள் மற்றும் 50 நிறுவனங்களின் பெயர்கள் நோபல் அமைதி பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
12 இந்தியர்கள் பெயர் பரிந்துரை:
நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் 12 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த தகவலை நோபல் பரிசு நிறுவனத்தை சேர்ந்த ஜியர்லுன்டல்டட் தெரிவித்தார். ஆனால், அவர்களின் பெயர் விவரத்தை வெளியிட மறுத்துவிட்டார். நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களில் அதிக அளவில் இடம் பெற்றவர்கள் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
2011ம் ஆண்டில் இப்பரிசுக்காக 241 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஆல்பிரட் நோபல் என்ற அறிஞரின் நினைவாக 1901ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர்களில் தியோடர் ரூஸ்வெல்ட், மார்டின் லூதர் கிங், ஹென்றி கிசஞ்சர், அன்னை தெரசா, ஆங் சான் சூகி, நெல்சன் மண்டேலா, யாசர் அராபத், கோஃபி அன்னன், பராக் ஒபாமா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.