சென்னை, வெலிங்கடன் ராணுவ தளங்களை முற்றுகையிடும் மாணவர்கள்: பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை: இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் உள்ள ராணுவ தளத்தை நாளை முற்றுகையிட கல்லூரி மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்றும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் மத்திய அரசு திருத்தம் செய்யக் கோரியும் தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல், மத்திய அரசு அலுவலகங்கள், ஆளுநர் மாளிகை, சாஸ்திரி பவன் ஆகியவை முன்பு முற்றுகை போராட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில் ஜ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும் நாளான நாளை சென்னை தீவுத் திடல் அருகே உள்ள இந்திய ராணுவ தளத்தை முற்றுகையிட தமிழ் ஈழத்திற்கான மாணவர்கள் போராட்டக் குழு தீர்மானித்துள்ளது. மேலும் ஊட்டியில் வெலிங்கடன் ராணுவ தளத்தை முற்றுகையிடவும் தயாராகி வருகின்றனர்.
இது தவிர பிற மாவட்டங்களில் மாணவர்கள் கலெக்டர் அலுவலகம், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நாளை போராட்டம் நடத்துகின்றனர்.
இது குறித்து தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திவ்யா கூறுகையில்,
ஐ.நா.வில் அமெரிக்கா தீர்மானத்தை தாக்கல் செய்த பிறகும் இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி வாபஸ் பெறப்பட்டுள்ளார். இதனால் நாளை நடக்கும் வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அமெரிக்கா கொண்டு வரும் ஒன்றுமில்லாத தீர்மானத்தை ஆதரிக்கவே இந்தியா முன்வரவில்லை. நாடாளுமன்றம் மற்றும் ஐ.நா. சபையில் இந்தியா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கை. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்திலாவது இந்தியா தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். மாணவர்களின் போராட்டத்தையடுத்து திமுக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக விலக மாணவர்களின் போராட்டமும் ஒரு காரணம் எனலாம். மத்திய அரசுக்கு நிர்பந்தம் கொடுக்க மாணவர்கள் சென்னையில் உள்ள ராணுவ தளத்தை நாளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவிருக்கிறோம்.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தையும் முற்றுகையிட இருக்கிறோம். இந்த போராட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கின்றனர் என்றார்.
மாணவர்களின் அறிவிப்பையடுத்து ராணுவ தளத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications