மும்பையில் மறிக்கப்பட்ட துபாய் கப்பல்!: தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன்கள், ஆடுகளுடன் ஐவர் கைது
மும்பை: மும்பை அருகே நேற்று நள்ளிரவில் துபாயில் இருந்து வந்த மர்ம கப்பல் ஒன்றை கடலோரக் காவல்படை அதிரடியாக வழிமறித்து நிறுத்தியது. அந்தக் கப்பலில் 28 ஆடுகள், தடை செய்யப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசி ஆகியவற்றுடன் இருந்த சந்தேக நபர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடலோர காவல்படைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து மும்பையிலிருந்து 35 நாட்டிகல் மைல் தொலைவில் துபாயைச் சேர்ந்த எம்எஸ்வி யூசுஃபி என்ற கப்பலை வழிமறித்தது. இந்த நடவடிக்கைகாக கடலோர காவல்படை, கடற்படை ஆகியவை கப்பல்கள் மற்றும் விமானம் ஆகியவை பயன்படுத்தப்பட்டது.
கப்பலில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 2010ம் ஆண்டே இந்தியாவில் தடை செய்யப்பட்ட துரயா செயற்கைக்கோள் தொலைபேசிகள் கிடைத்தன. இந்த செயற்கைக் கோள் தொலைபேசிகளை தீவிரவாதிகள் தங்களது நாசவேலைக்குப் பயன்படுத்தியதால் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கப்பலில் 28 உயிருள்ள ஆடுகள் இருந்ததும் கடற்படையினருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சில இறந்த ஆடுகள் கடலில் தூக்கி வீசப்பட்டதும் தெரியவந்தது. ஆடுகளை பயன்படுத்தி மிகப் பெரிய அளவிலான போதைப் பொருள் கடத்தலில் அக்கப்பலில் இருந்தோர் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.
இதேபோல் இந்தியாவில் நாசவேலைக்கான சதியில் அவர்கள் 5 பேரும் ஈடுபட்டவர்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.