சென்னை: தனியார் பள்ளிகள் கட்டணம் 3 மடங்கு உயர்வு… பெற்றோர் அதிர்ச்சி
சென்னை: சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யும். இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணம் குறித்த ஆய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு பள்ளிகளிலும் செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் கல்விக்காக மேற்கொள்ளப்படும் செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கல்வி கட்டணம் முடிவு செய்யப்படுகிறது. மே மாத இறுதியில்தான் எந்தெந்த பள்ளிகளுக்கு எவ்வளவு கட்டணம் என்பது முடிவாகும் என்று தெரிகிறது.
அதற்கு முன்னதாகவே சென்னையில் பெரும்பாலான பள்ளிகள் தாங்களாகவே கட்டணத்தை நிர்ணயித்து வசூலிக்க தொடங்கியுள்ளன. ஒரு சில பள்ளிகளில் இந்த கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகமாக கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோடு ஏப்ரல் மாத இறுதிக்குள் அதனை கட்டாயம் கட்ட வேண்டும் என்றும் கெடுவிதித்துள்ளன. இதனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.
கடந்த முறை கூடுதலாக கட்டணம் வசூலித்த பள்ளிகள் முன்பாக பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர் ஒருசில பள்ளிகள் மட்டுமே கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பிக் கொடுத்தன.
இந்த முறையும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து பெற்றோர்கள் பள்ளி கல்வி இயக்கக வளாகத்தில் உள்ள, கல்வி கட்டண நிர்ணய கமிட்டியிடம் புகார் தெரிவிக்கலாம் என்று கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள் பற்றி புகார் கூறிய பெற்றோர்களின் குழந்தைகள் ஒருசில பள்ளிகளில் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமும் நடைபெற்றது. இதனால் பள்ளி நிர்வாகிகளுக்கும் பெற்றோர்களுக்கும் மோதல் ஏற்பட்டன. இதனால் இந்தமுறை பெற்றோர்கள் புகார் கூற தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே கட்டணக்கொள்ளையைத் தடுக்கவும் முறையான கட்டணத்தை பள்ளிகள் வசூலிக்க அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒரே கட்டண நிர்யணம்
இதனிடையே கல்விக் கட்டண குழு தற்போது இந்த ஆண்டுக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்வதில் கிரேடு முறையை பின்பற்ற உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளின் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications