அணு உலைக்கு எதிராக 597வது நாள் போராட்டம்… அடுத்த போராட்டம் குறித்து 7ம் தேதி ஆலோசனை
கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் புகையினால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர் என்பது புகார். இதனையடுத்து இன்று அணுமின்நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் அணுவிஜய்நகரை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
500க்கும் மேற்பட்ட படகுகளில் வந்த போராட்டக்குழுவினர் காலை 9 மணிக்கு முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கினர் 12 மணிக்கு போராட்டம் நிறைவடைந்தது.
இந்த போராட்டம் குறித்து உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக்கோரி நடைபெற்று வரும் தொடர் போராட்டம் 597-வது நாளை எட்டியுள்ளது. கடந்த ஒரு வாரமாக அணுமின்நிலையத்தில் இருந்து கரும்புகை வெளியேறுகிறது.
அணுமின்நிலைய கட்டுமானப்பணியில் ஆற்றுமணலுக்கு பதில் கடல் மணல் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அணுமின்நிலைய கட்டிட பொருட்கள் பெரும்பாலானவை தரமற்றவை.
அணுமின்நிலையத்தை போலவே அங்குள்ள உயர் அதிகாரிகளும் தர மற்றவர்கள். அணுமின்நிலையத்தின் மையப்பகுதியில் மாற்றம் செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்கள். அவரவர் விருப்பம்போல் மாற்றம் செய்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் எந்த அணுகுமுறை கடைபிடிப்பது என்பது குறித்தும் அடுத்த கட்ட போராட்டம் குறித்தும் வருகிற 7-ந்தேதி இடிந்தகரையில் ஆலோசனை நடத்தஉள்ளோம். இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல தரப்பு மக்கள், மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள்,சமூக இயக்கத்தினர் பங்கேற்க உள்ளனர் என்றார்.