மதுரையில் 586.86 ஏக்கரில் 'சாட்டிலைட் சிட்டி': ஜெயலலிதா அறிவிப்பு

சட்டசபையில் 110-வது விதியின் கீழ் இன்று அவர் ஒரு அறிக்கையை அவர் வாசித்தார் அதில் கூறியுள்ளதாவது:
மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமானதாக விளங்கும் உறைவிடத் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் எண்ணற்ற பயன்களை பெறும் வகையிலும் தேவையான அனைத்து திட்டங்களையும் வடிவமைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வீட்டுவசதி வளர்ச்சியினை எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தி வருகிறது என்பதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
மதுரை மாவட்டத்தில், தற்போது பெருகி வரும் வீட்டு வசதித் தேவையைக், கருத்தில் கொண்டு மதுரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் விமான நிலையத்திற்கு அருகில் மதுரை - திருநெல்வேலி நான்கு வழிப் பாதையில் தோப்பூர் மற்றும் உச்சப்பட்டி கிராமங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 586.86 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் ஒன்று உருவாக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
19,500 மனைகள் ஒதுக்கீடு
இந்த துணைக்கோள் நகரத்தில் 19,500 மனைகள் உருவாக்கப்படும். இதில், 14,300 மனைகள் குறைந்த வருவாய் பிரிவினருக்கும், 2,500 மனைகள் மத்திய வருவாய் பிரிவினருக்கும், 750 மனைகள் உயர் வருவாய் பிரிவினருக்கும், 1,950 மனைகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த புதிய துணைக்கோள் நகரத்தில் அடிப்படை வசதிகளான, சாலைகள், குடிநீர் வசதி, கழிவு நீர் வடிகால் வசதி, தெரு விளக்குகள், மழை நீர் சேகரிப்பு திட்டம் மற்றும் பூங்காக்கள் ஆகியவைகள் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
மேலும், இங்கு குடியேறும் மக்களின் நலனுக்காக பள்ளி வளாகம், வணிக மனைகள், காவல் நிலையம், அஞ்சலகம், ஆரம்ப சுகாதார வசதி, தீயணைப்பு நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் என சமுதாயத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இங்கே உருவாக்கப்படும். இந்தத் துணைக்கோள் நகரம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications