குறு, நடுத்தரத் தொழில் மூலம் 15 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புக்கு நடவடிக்கை: அமைச்சர் மோகன்
சட்டசபையில் சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அவர் பேசுகையில், இந்தியாவிலேயே அதிக நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில், தமிழ்நாடுதான் முதலிடத்தைப் பெற்றுள்ளது. மேலும் 2003-ம் ஆண்டில் 4,76,699 ஆக இருந்த சிறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையானது 28.2.2013 நிலவரப்படி 8,43,617 ஆக அதிகரித்துள்ளது. கோயம்புத்தூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், புதுக்கோட்டை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் மொத்தம் ரூ.881 லட்சம் மதிப்பீட்டில் பொது வசதி மையத்துடன் கூடிய கயிறு குழுமங்கள் அமைக்க பிரேரணைகள் கயிறு வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சியில் ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் ஸ்புரூட்டி குழும திட்டத்தின் கீழ் கயிறு குழுமம் அமைக்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டு கயிறு வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.கோயம்புத்தூரில் மாவு அரவை எந்திரம் தயாரிக்கும் குழுமம் ஒன்று ரூ.288.20 லட்சம் மதிப்பீட்டில் ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்து, அவர்களுக்கு சுமார் ரூ.1 கோடி வரையிலான திட்ட மதிப்பில் உற்பத்தி மற்றும் சேவை தொழில் நிறுவனங்களை துவங்க ரூ.25 லட்சம் வரை, 25 விழுக்காடு மானியமாக வழங்கி, 3 விழுக்காடு வட்டி மானியத்துடன் கூடிய கடனுதவி பெறவும் உதவி செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் முதல் ஆண்டிலேயே 3,12,263 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் மூலமாக தொழில் முனைவோர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, 30 நாட்களுக்குள் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மூலம் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 15 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, நம் நாட்டின் மொத்த உற்பத்தியில் 45 விழுக்காடும், ஏற்றுமதியில் 40 விழுக்காடும், பங்களிப்பு அளிப்பதோடு, தமிழ்நாட்டில், 58.83 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்து வருகிறது என்றார் அவர்.