சோனியா மருமகன் வத்ராவை அம்பலப்படுத்திய அசோக் கேம்காவுக்கு 44-வது டிரான்ஸ்பர்!
ஹரியானா மாநிலத்தில் ஏராளமான விளைநிலத்தை அடிமாட்டுக்கு வளைத்துப் போட்டு அதை டிஎல்ப் நிறுவனத்துக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தார் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா என்று கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இது அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியது. விவசாயிகளிடம் நிலம் பலவந்தமாக பறிக்கப்பட்டது என்று வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார் இது தொடர்பான புகார்களை விசாரித்து வந்த அசோக் கேம்கா. இதனால் அவர் அப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதன் பின்னர் ஓராண்டுக்குள் 3 முறை வெவ்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடைசியாக ஹரியானா விதை அபிவிருத்தி கழகத்தில் நிர்வாக மேலாளராக அவர் பணியாற்றி வந்தார். அங்கும் கேம்கா சும்மா இருக்கவில்லையே..விதை கொள்முதல் ஊழலை வெளிக்கொண்டு வந்து சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரைத்தார். மேலும் இது தொடர்பான பொதுநலன் வழக்கு ஒன்றில் ஏப்ரல் 12-ந் தேதிக்குள் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. நிச்சயம் அரசுக்கு எதிராகத்தான் கேம்கா அறிக்கை தாக்கல் செய்வார் என்று எண்ணியதால் அவரை திடீரென தொல்லியல் துறைக்கு கேம்கா டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கிறார். அவரது 20 வருட அரசுப் பணி காலத்தில் இது 44-வது பணியிட மாற்றம். அதுவும் பகல் 3.30 மணிக்கே அவரை அலுவலகத்தை விட்டு போகச் சொல்லிவிட்டு இரவு 7.30 மணிக்குத்தான் டிரான்ஸ்பர் ஆர்டர் கொடுத்திருக்கின்றனர் என்று குமுறியிருக்கிறார் கேம்கா.
தொல்லியல்துறையில் என்ன அதிரடியைக் கிளப்புவாரோ கேம்கா?