முதல்ல ஆதார் அட்டை வாங்கு, அப்புறம் பான் கார்டு தர்றேன் ..மத்திய அரசு புதிய முடிவு!
டெல்லி: இதுவரை பான் கார்டு வாங்காதவரா நீங்கள்.. அப்படியானால் முதலில் போய் ஆதார் அட்டையை வாங்குங்கள். அப்படிச் செய்தால்தான் உங்களுக்கு பான்கார்டு கிடைக்கும்.
இதுதொடர்பான புதிய உத்தரவை மத்திய அரசு விரைவில் பிறப்பிக்கவுள்ளது. பான் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதார் அட்டையைத்தான் முகவரி மற்றும் அடையாள ஆதாரமாக காட்ட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவிக்கவுள்ளது.
இதுதொடர்பான திட்ட வரைவு நிதியமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதை நிதியமைச்சகமும் ஏற்றுள்ளதாக தெரிகிறது. எனவே விரைவில் அறிவிப்பு வரலாம்.
இந்தப் புதிய உத்தரவின் மூலம் போலி பான் கார்டுகளை ஒழிக்க முடியும் என மத்திய அரசும், நிதியமைச்சமும், வருமானவரித்துறையும் கருதுகின்றனவாம்.
இதுகுறித்து நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இனிமேல் ஆதார் அட்டையை மட்டுமே அடையாள மற்றும் முகவரி ஆதாரமாக ஏற்கவுள்ளோம். இதன் மூலம் போலி அடையாள , முகவரி ஆதாரங்களைக் காட்டி பான் கார்டு பெறுவது தவிர்க்கப்படும். விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றார்.
தற்போது பான் கார்டு பெறுவதற்கான அடையாள மற்றும் முகவரி ஆதாரமாக பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், சொத்துப் பத்திரம் உள்ளிட்டவை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் இதுவரை 16.49 கோடி பேருக்கு பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.