நில அபகரிப்பு புகாரில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. தலைமறைவு
திருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான நிலத்தை திருத்தணி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியன் அபகரித்தார் என்பது புகாராகும். திருவள்ளூர் மாவட்ட நில அபகரிப்பு பிரிவில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பார்த்தசாரதி செய்த புகாரினை அடுத்து, அருண் சுப்ரமணியன் கடந்த 18.7.2012 அன்று கைதானார். இதனையடுத்து செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்து ஜாமீனில் வெளியே வந்தார் அருண் சுப்ரமணியன்.
இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்ட நில அபகரிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு வைத்திய லிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், 'தவறான தகவல் சொல்லி எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியம் ஜாமீன் பெற்றுள்ளார். அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறி இருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியம் ஜாமீனை கடந்த 8-ந் தேதி ரத்து செய்து உத்தரவிட்டார். இதை அறிந்ததும் எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியன் தலைமறைவானார்.
இந்த நிலையில் இன்று காலை திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் அருண் சுப்பிரமணியத்தை தேடி வீட்டிற்குச் சென்று சோதனை செய்தனர். அவர் இல்லை என்று தெரிந்ததை அடுத்து அவரது மகன் விஜய்ஆனந்த் மற்றும் வேலை செய்யும் பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். தலைமறைவாக உள்ள அருண் சுப்ரமணியத்தைத் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.