சேலத்தில் ரூ.1000 லஞ்சம் கேட்டு விரட்டப்பட்ட கர்ப்பிணி… நடுவழியில் பிரசவம்
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், பிரசவத்துக்காக வந்த கர்ப்பிணி பெண்ணிடம்,
1,000 ரூபாய் கேட்டு, ஊழியர்கள் விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு,பேருந்து நிலைய கழிப்பறையில் குழந்தை பிறந்தது.
சேலம் அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த லட்சுமி, வயது 27, நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்துக்காக,சேலம் அரசு மருத்துவமனைக்கு, நேற்று அதிகாலை வந்தார். அவருடன், கணவர் சாமுவேல் குழந்தைகள் வெங்கடேஷ், நவீன் வந்தனர்.
பெயர் விவரங்களை வாங்கிய ஊழியர்கள், 1,000 ரூபாய் பணம் இருந்தால் தான் சிகிச்சை கிடைக்கும் என, கூறியுள்ளனர். பணம் கொடுக்க வழியில்லாமல் தவித்த அவர், பழைய பேருந்து நிலையம் அருகே வந்து அமர்ந்துள்ளார். தொடர்ந்து, பிரசவ வலி அதிகரித்ததால், தவித்துள்ளார்.அங்கு வந்த பண்ணாரி என்ற பெண், மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு லட்சுமியை அழைத்துச் சென்று, பிரசவம் பார்த்தார்.
லட்சுமிக்கு காலை 11 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின், 108 ஆம்புலன்ஸ் மூலம், அரசு மருத்துவமனைக்கு லட்சுமி கொண்டு செல்லப்பட்டார்.
கையில் காசில்லை
பிரசவம் பார்க்க முடியாது என்று மருத்துவமனை ஊழியர்களால் விரட்டியடிக்கப்பட்ட பெண் லட்சுமி தனது கணவர் குழந்தைகளுடன் பிழைப்பு தேடி விஜயவாடாவில் இருந்து எட்டு மாதத்திற்கு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் தங்கி, கிடைத்த வேலையை செய்து வந்த போது மூன்றாவதாக கர்ப்பம் தரித்த லட்சுமிக்கு நேற்று பிரசவ வலி வந்துள்ளது. அரசு மருத்துவமனை பிரசவ வார்டுக்கு சென்ற போது பணம் கேட்டு மனிதாபிமானம் இன்றி திருப்பி அனுப்பிவிட்டனர்.
கலெக்டர் விளக்கம்
இந்த பிரச்சினை தொடர்பாக, கலெக்டர் விளக்கம் கேட்டுள்ளார். பிரசவ வார்டில் பணியில் இருந்த மருத்துவர், செவிலியர்களிடம், விசாரணை நடத்தப்படும், என அரசு மருத்துவமனை டீன் வள்ளிநாயகம் கூறியுள்ளார்.
பிரசவம் பார்த்த பண்ணாரி
சேலம் மாவட்டம், ஆத்தூர் தேவியாக்குறிச்சியைச் சேர்ந்தவர் பண்ணாரி, 55 வயதான இவர் மாற்றுத்திறனாளி கணவருக்கு, கலெக்டரிடம் உதவித்தொகை கேட்பதற்காக, சேலம் வந்தார். திங்கட்கிழமை நடக்கும் மக்கள் குறைதீர் முகாமில், கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக, கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் தங்கியிருந்தார். இந்நிலையில், பிரசவ வலியால் தவித்த லட்சுமிக்கு, பண்ணாரி பிரசவம் பார்த்துள்ளார். யாரும் உதவிக்கு வராதபோது, தனி ஆளாக, கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய அவரை, அங்கிருந்த மக்கள் பாராட்டினர்.