நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு- நிதிஷ் அரசுக்கான பாஜக ஆதரவு வாபஸ்?
பாட்னா: பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கான ஆதரவை பாஜக விலக்கிக் கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பார்லிமென்ட் தேர்தலில் பாஜக, பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை முன்னிறுத்த திட்டமிட்டிருக்கிறது. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளமோ நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தேசிய செயற்குழுவில் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது.
இதனால் பாரதிய ஜனதா கட்சி கடும் அதிருப்தி அடைந்துள்ளது.ஐக்கிய ஜனதா தளம் கட்சி பீகாரில் மட்டுமே ஆட்சியில் உள்ளது,. முதல்வர் நிதிஷ்குமாருக்கு பாரதிய ஜனதா ஆதரவு அளித்து வருகிறது. நரேந்திர மோடி எதிர்ப்பு கொள்கையை நிதிஷ்குமார் கடைப்பிடித்து வருவதை அம்மாநில பாரதிய ஜனதா தலைவர்களும் விரும்பவில்லை. இதனால் டெல்லியில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்குடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும் நிதிஷ்குமார் அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறவும் அவர்கள் வலியுறுத்தினர்.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிந்ததும் பீகாரில் நிதிஷ்குமார் அரசுக்கான ஆதரவை பாஜக விலக்கிக் கொள்ளும் என்று தெரிகிறது. பாஜக ஆதரவை விலக்கிக் கொண்டாலும் நிதிஷ்குமார் அரசு கவிழ வாய்ப்பில்லை.
பீகார் சட்டசபையில் கட்சிகளின் பலம்:
மொத்த இடங்கள் - 243
ஐக்கிய ஜனதா தளம் - 115
பாஜக ஜனதா - 91
ராஷ்டீரிய ஜனதா தளம் - 22
லோக் ஜன சக்தி - 3
காங்கிரஸ் - 4
இந்திய கம்யூனிஸ்ட் - 1
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - 1
சுயேச்சைகள் - 6
தனி மெஜாரிட்டிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் அக் கட்சியில் 115 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 6 சுயேச்சைகள் ஆதரவு அளிப்பதால் நிதிஷ்குமார் அரசுக்கு ஆபத்து இல்லை என்றே கூறப்படுகிறது.