தாலிக்கு தங்கம்: ஒரே குடும்பத்தில் இரு பெண்களுக்கும் கிடைக்கும்!
சென்னை: தமிழக அரசின், தாலிக்கு தங்கம் திட்டம் இனி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்களுக்கு கிடைப்பதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த, 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போது அதிமுக வின் தேர்தல் வாக்குறுதியில் படித்த ஏழை பெண்களின் திருமணத்துக்கு, தாலிக்கு, நான்கு கிராம் தங்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதேபோல் திருமண உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்தி எஸ்.எஸ்.எல்.சி., படித்திருந்தால், 25 ஆயிரம் ரூபாய்; பட்டதாரி மற்றும் பட்டயப் படிப்பு படித்திருந்தால், 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி உயர்த்தப்படும் என கூறப்பட்டது.
வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த உடனே முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார். இது பெண்களிடையே வரவேற்பை பெற்றன. இத்திட்டத்தால், நகர்புறம் மட்டுமின்றி, கிராம புற பெண்களும் மேல்படிப்பு படித்தனர்.
குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும்தான் இந்த திட்டம் செல்லுபடியாகும் என்று கூறப்பட்டது. இதனால் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டனர். இரு பெண்களுக்கு திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரிமிருந்து கோரிக்கை எழுந்தது. இது, அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.
அதன்படி, விரைவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, இரு பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படும் என, அரசின் அறிவிப்பு வெளியாகும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டப்படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, இரு பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications