பாஸ்டன் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது 'செல்போன் வெடிகுண்டுகள்'?
பாஸ்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் அடுத்தடுத்து நடந்த இரு குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் செல்போன் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாஸ்டன்நகரில் நடைபெற்ற மாராதான் போட்டியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சிறுவன் உட்பட 3 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் பலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில்தான் குண்டுகள் வெடிக்கத் தொடங்கிய உடனே பாஸ்டன் நகரில் செல்போன் இணைப்புகள் சேவை துண்டிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதிகாரப்பூர்வமாக செல்போன் சேவையை துண்டிக்கவில்லை என்றும் ஒரே நேரத்தில் மாராதான் போட்டியில் பங்கேற்ற பல்லாயிரம் பேர் செல்போன்களை பயன்படுத்தியதால் நெட்வொர்க்கில் நெருக்கடி ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் செல்போன் சேவைகளை துண்டித்ததன் மூலம் இதர செல்போன் வெடிகுண்டுகளை போலீசாரால் கண்டுபிடிக்க முடிந்தது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி ராணுவ ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், பொதுவாக ஒரு செல்போனை வாங்கி 30 நிமிடத்துக்குள் வெடிகுண்டுகளை பொருத்திவிடக் கூடிய அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது.. அந்த வகையான செல்போன் வெடிகுண்டுகளே பாஸ்டன்நகரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். என்கிறார் அவர்.