நாட்டின் பெயர் கெட்டுப் போனதற்கு காரணம் இவங்க மட்டும்தானா???
இந்தியாவுக்கு இவர்களால் கெட்ட பெயர் ஏற்பட்டதாக ஒரு இணையதளத்தில் பட்டியல் போட்டுள்ளனர். படிக்க சுவாரஸ்யமாக இருந்தாலும் இவர்கள் மட்டும்தானா கெட்ட பெயருக்குக் காரணம் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
ஊழல் மற்றும் சர்ச்சைப் பேச்சுக்களை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியலை போட்டுள்ளனர்.
சரி பட்டியலைப் பார்ப்போம்....
சுஷில் குமார் ஷிண்டேவின் இந்து தீவிரவாதப் பேச்சு
மத்திய உள்துறை அமைச்சரான சுஷில் குமார் ஷிண்டே வந்தது முதலே சர்ச்சைதான். அவர் சமீபத்தில் பேசிய இந்து தீவிரவாத கருத்து தொடர்பான பேச்சு பெரும் புயலைக் கிளப்பி விட்டது. கடைசியில் தான் பேசியது குறித்து அவர் விளக்கம் தர வேண்டியதாகி விட்டது.
தப்புத் தப்பான முடிவுகள் - மமதா
மேற்கு வங்க முதல்வரான மமதா பானர்ஜி எடுத்த தப்புத் தப்பான முடிவுகள், பேச்சுக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. அவரது செயல்பாடுகளால் மேற்கு வங்கத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்குமே கூட சங்கடம் ஏற்பட்டது.
கொல்கத்தாவில் நடந்த சில கற்பழிப்புகள், ஜாதவ்பூர் பல்கலைக்கழ பேராசிரியர் மீது போடப்பட்ட அவதூறு வழக்கு உள்ளிட்டவை சர்ச்சையை ஏற்படுத்தின.
மாட்டுத் தீவன ஊழல் யாதவ்
லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த காலத்தில் நடந்த மாட்டுத் தீவன ஊழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1996ல் இந்த ஊழல் நடந்திருந்தாலும் இன்று வரை யாதவை துரத்திக் கொண்டிருக்கிறது. மாட்டுத் தீவனம் வாங்கியதில் ரூ. 950 கோடியை அடித்து விட்டார் யாதவ் என்பதுதான் புகாராகும்.
அஜால் குஜால் என்டி திவாரி
ஆந்திர ஆளுநராக இருந்தபோது செக்ஸ் ஊழலில் சிக்கி பதவியை இழந்தவர் நாராயண் தத் திவாரி. உ.பி. மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முதல்வர் பதவியிலும் இருந்தவரான இந்த சீனியர் காங்கிரஸ் தலைவர், ஆளுநர் மாளிகையிலேயே பெண்களுடன் சல்லாபம் செய்து சிக்கிய செயல் அனைவரையும் தலை குணிய வைத்தது.
ஊழல் நாயகி மாயாவதி
ஊழல் நாயகி மாயாவதி என்று தாராளமாக கூறலாம். அப்படி ஒரு மெகா ஊழல் நாயகியாக வலம் வந்தவர் மாயாவதி, மு்ன்னாள் உபி. முதல்வர். இருப்பினும் தன்னிடம் உள்ள எம்.பிக்கள் பலத்தால் காங்கிரஸை மட்டுப்படுத்தி சிபிஐ விசாரணை தன்னை வாட்டி வதைக்காமல் பார்த்துக் கொள்கிறார்.
கருணாநிதி
பல்வேறு ஊழல் புகார்கள் கருணாநிதி மீது எழுந்ததுண்டு. இருப்பினும் எதிலும் அவர் தண்டிக்கப்பட்டதில்லை, குற்றவாளி என அறிவிக்கப்பட்டதில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் கருணாநிதிக்கும், திமுகவுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது.
சரத் பவார்
தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவார், மீதும் பல ஊழல் புகார்கள் குவிந்தன. டெல்ஜி முத்திரைத்தாள் ஊழல் வவக்கிலும், லவசா ஊழலிலும் பவாரின் பெயர் அடிபட்டது. அதை விட இவர் மத்திய விவசாயத்துறை அமைச்சராக இருந்தபோது நாடு முழுவதும் 15,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்தான் பெரும் அவப் பெயராக அமைந்தது.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி பெரிய அளவிலான ஊழல் புகார்களில் இவர் அடிபடாவிட்டாலும் கூட முதிர்ச்சியற்ற ஒரு தலைவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் ராகுல் காந்தி. முக்கிய பிரச்சினைகளில் இவருக்குத் தெளிவான கருத்து இல்லை. நதி நீர் இணைப்பை விமர்சித்து அனைவரின் கண்டனத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டார்.
காமன்வெல்த் சுரேஷ் கல்மாடி
டெல்லி காமன்வெல்த் போட்டியில் நடந்த மிகப் பெரிய ஊழல்களால் சுரேஷ் கல்மாடி சற்றும் அயர்ந்து போகவில்லை. மாறாக மக்கள்தான் கொதித்துப் போய் விட்டனர்.
ஸ்பெக்ட்ரம் ராசா
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் நாயகன் ராசா என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ராசா தவறு செய்தாரா, கனிமொழி தவறு செய்தாரா, பிரதமருக்கும் இதில் உடந்தை இருக்கிறதா என்று பல கேள்விகள் எழுந்து நிற்கின்றன.
இப்ப சொல்லுங்க, இவங்க மட்டும்தானா நாட்டின் பெயர் கெட்டுப் போக காரணம்...