பெங்களூர் குண்டுவெடிப்பு எதிரொலி: கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு, தீவிர வாகன சோதனை
பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகம் அருகே நேற்று குண்டுவெடித்ததில் 16 பேர் காயம் அடைந்தனர். குண்டு வைக்கப்பட்ட இரு சக்கர வாகனம் சென்னையைச் சேர்ந்தவரின் பெயரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அந்த நபர் 4 ஆண்டுகளுக்கு முன்பே வாகனத்தை விற்றுவிட்டு வெளிநாடு சென்றது தெரிய வந்தது.
பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து முக்கிய நகரங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 5 உதவி கமிஷனர்கள், 30 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவைக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.
மேலும் 33 ரோந்து வாகனங்களில் போலீசார் 24 மணிநேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர நகரில் உள்ள லாட்ஜுகளில் சந்தேகத்திற்கு இடமாக யாராவது தங்கியுள்ளார்களா என்று நேற்று இரவு முதல் விடிய விடிய சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இது தவிர பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம், கோவில்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.