தமிழ் உணர்வாளர்களை வேவு பார்த்த விவகாரம்- தனியார் புலனாய்வு நிறுவன அதிகாரி மீது வழக்கு
சென்னை: ஐபிஎல் நிர்வாகத்துக்காக தமிழ் உணர்வாளர்கள், மாணவர்களை வேவு பார்த்ததாக தனியார் புலனாய்வு நிறுவன அதிகாரி மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவரும், சென்னை வழக்கறிஞருமான புகழேந்தி சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவுக்கு ஒரு புகார் மனுவை பதிவு அஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை அனுப்பியிருந்தார். அதில்,
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள், தமிழ் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடக் கூடாது என அனைத்து தமிழ் இயக்கங்களும், கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தின் விளைவாக சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்கள் விளையாட தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் சண்டிகாரைச் சேர்ந்த கோர்கி சந்தோலா என்பவர் சென்னையில் முகாமிட்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படும் கல்லூரி மாணவர்கள், தமிழ் இயக்கங்களின் நிர்வாகிகள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை சேகரித்து வருவதாகவும் அவர்களின் செல்போன், தொலைபேசி உரையாடல்களை நவீன கருவி மூலம் பதிவு செய்து வருவதாகவும் நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.
அடுத்தவர் உரையாடலை பதிவு செய்வது இந்திய சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகும். எனவே அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழும், வயர்லஸ் மற்றும் டெலிகிராஃபி சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் கோர்கி சந்தோலா மீது தகவல் தொழில்நுட்ப சட்டம், வயர்லஸ் மற்றும் டெலிகிராஃபி சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீசார்
வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குத் தொடர்பாக முதல்கட்டமாக புகார்தாரர் புகழேந்தியிடம் போலீசார் விசாரணை செய்தனர்.
இதில் சில முக்கிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக ஐ.பி.எல். நிர்வாகியிடம் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் கோர்க்கியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் சென்னை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.