லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மாயாவதி! 18 பிராமணர்களுக்கும் வாய்ப்பு!
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரித்து வருகிற முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி அல்லது மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று ஆதரவை திரும்பப் பெற்றால் எந்த நேரத்திலும் லோக்சபா தேர்தல் வரும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் லோக்சபா தேர்தலை சந்திக்க மாயாவதி தயாராகி வருகிறார். இதன் முதல் கட்டமாக தமது கட்சியின் முதலாவது வேட்பாளர் பட்டியலை லக்னோவில் நேற்று வெளியிட்டார்.
18 பேர் பிராமணர்கள்
உத்தரப்பிரதேச மாநிலத்தின் 80 தொகுதிகளில் 36 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 36 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பிராமண சமுதாயத்தினர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய எம்.பி.க்கள் 6 பேருக்கும், ராஜ்யசபா எம்.பி. ஒருவருக்கும் லோக்சச்பா தேர்தலில் போட்டியிட மாயாவதி வாய்ப்பு அளித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிக்கு சீட்
மாயாவதி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ள சிவசேனா முன்னாள் கவுன்சிலர் பவன் பாண்டே, சுல்தான்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியில் பாஜகவின் வருண்காந்தி போட்டியிடக் கூடும். மறைந்த பூலான் தேவியின் கணவர் உமீத் சிங் (ஷாஜகான்பூர் தொகுதி), மாநில முன்னாள் முதல்வர் ராகேஷ்தர் திரிபாதி (மிர்சாப்பூர்), கட்சியின் மூத்த தலைவர் ராம்வீர் உபாத்யாயாவின் மனைவி சீமா எம்.பி. (பதேப்பூர் சிக்ரி), ராம்வீர் உபாத்யாயாவின் சகோதரர் முகுல் உபாத்யாயா (காசியாபாத்) தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். காசியாபாத் தொகுதி பா.ஜனதா கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங் தொகுதி.